கழற்றி விட்ட“கூட்டணி”.. பதவி இழக்கும் இம்ரான் கான்? நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருப்பதால் பரபரப்பு
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கூட்டணிக் கட்சியான முத்தஹிதா குவாமி ஆதரிப்பதாக அறிவித்துள்ள நிலையில், பிரதமர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே இன்று இம்ரான் கான் நாட்டு மக்களிடையே உரையாற்ற இருக்கிறார்.
Recommended Video
342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் பேரவையில் கடந்த தேர்தலில் கூட்டணி கட்சி உறுப்பினர்களையும் சேர்த்து 179 உறுப்பினர்களை பெற்ற இம்ரான் கான் அந்நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியில் 164 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ள நிலையில் கூட்டணி கட்சிகள் தான் அவரது ஆட்சியின் தலைவிதியை தீர்மானித்து வந்தன .

பிரதமர் இம்ரான் கான்
இம்ரான் கானின் கட்சி தவிர பிஎம்எல்- என், பாகிஸ்தான் மக்கள் கட்சி, எம் க்யூஎம், பலுசிஸ்தான் அவாமி கட்சி மற்றும் சிறிய கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி கூட்டணியில் 177 உறுப்பினர்கள் உள்ளனர் . இம்ரானின் கட்சி உறுப்பினர்களும் சிலர் அவருக்கு எதிராக திரும்பிய நிலையில் அவரது ஆட்சி கேள்விக்குறியானது. இந்நிலையில் பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்தன.

ஆதரவு வாபஸ்
கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட்- பாகிஸ்தான் கட் தனது ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால் பாகிஸ்தான் அரசு கவிழும் சூழல் உருவாகியுள்ள நிலையில் இம்ரான் கான் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அரசியலமைப்பு சட்டத்தின்படி இம்ரான் கான் சட்டசபையை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலுக்கு அழைப்பு விடுக்க முடியாது. அவர் வாக்களிப்பில் தோல்வியடைந்தால், எதிர்க்கட்சிகளுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் ராணுவம்
பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றில், எந்தப் பிரதமரும் முழு பதவிக் காலத்தை முடித்ததில்லை. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமாபாத் ராணுவ சீருடை அணிந்த நபர்களால் ஆளப்பட்டு வருவதாகவும், பாகிஸ்தான் இராணுவம் அரசியல் வரலாற்றில் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் வரலாற்றில் ராணுவ ஆட்சி, நீதிமன்றங்கள் மூலம் பதவியிழந்த பிரதமர்களுக்கு மத்தியில் நம்பிக்கை தீர்மானம் மூலம் பதவியை இழந்த முதல் பிரதமர் இம்ரான் கான் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

நாட்டு மக்களுக்கு உரை
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி கட்சியான முத்தஹிதா குவாமி இயக்கத்தின் உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிய நிலையில் அவர் ராஜினாமா செய்வதாக வதந்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இம்ரான் கான் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று உள்துறை அமைச்சர் ஷேக் ரஷித் பாகிஸ்தான் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். கடைசியாக இஸ்லாமாபாத்தில் நடந்த பேரணியில் தனது அரசாங்கத்தை கவிழ்க்க வெளிநாட்டு சதி என்று இம்ரான் குற்றம் சாட்டிய நிலையில் அது குறித்த கடித ஆதாரத்தை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications