இந்தியா முதுகில் குத்தும் புதின்? பரம எதிரி பாகிஸ்தானுடன் முக்கிய ஒப்பந்தம் செய்த ரஷ்யா! சிக்கல்
இஸ்லாமாபாத்: நம் நாட்டின் பரமஎதிரியான பாகிஸ்தானுக்கு உதவி செய்யும் வகையில் நம் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யா முக்கிய ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானின் பொருளாதாரம் மேம்பட உள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஒப்பந்தம் மூலம் ரஷ்யா - பாகிஸ்தான் இடையேயான உறவு வலுப்பட தொடங்கும் என்பதால் இந்த நடவடிக்கை நம் நாட்டுக்கு வார்னிங்காக பார்க்கப்படுகிறது. அப்படி என்ன வகையான ஒப்பந்தம் ரஷ்யா - பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்டது? அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
பாகிஸ்தான் நம் நாட்டிடம் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. சமீபத்தில் கூட பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து நம் இருநாடுகளுக்கும் இடையே போர் தீவிரமானது. நம் நாடு அடித்த அடியில் அலறிய பாகிஸ்தான் மண்டியிட்டு பணிந்தது. நம் நாட்டின் அதிரடி தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள், ராணுவ முகாம், விமானதளங்கள் அழிக்கப்பட்டன.

இதையடுத்து போரை நிறுத்தும்படி பாகிஸ்தான் கெஞ்சியதால் நம் நாடு சம்மதம் தெரிவித்தது. இருப்பினும் பாகிஸ்தான் அரசியல்வாதிகள் நம் நாட்டை அவ்வப்போது சீண்டி வருகின்றனர். பாகிஸ்தான் - இந்தியா மோதலின்போது ரஷ்யா எப்போதுமே நம்முடன் தான் இருந்துள்ளது. காஷ்மீர் விவகாரமாக இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் சரி ரஷ்யா எப்போதுமே நமக்கு ஆதரவாக தான் இருந்துள்ளது.
மாறாக அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தான் பக்கம் நிற்பதை வாடிக்கையாக வைத்துள்ளன. 1971ல் பாகிஸ்தானின் ஒருபகுதியாக இருந்த கிழக்கு பாகிஸ்தான் மக்கள் வங்கதேசத்தை தனிநாடு கோரிக்கையை வைத்தனர். பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக மோதினர். இதற்கு இந்தியா உதவியது. இந்திய படை வீரர்கள், பாகிஸ்தான் படை வீரர்களை விரட்டி வங்கதேசம் எனும் நாட்டை உருவாக்கி கொடுத்தனர் இந்த போரின் போது இந்தியாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து அச்சுறுத்தல் வந்தது.
பாகிஸ்தான் விவகாரத்தில் தலையிட கூடாது என்று கூறப்பட்டது. ஆனால் அதையும் மீறி தான் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வங்கதேசம் உருவாக வழிவகுத்து கொடுத்தார். இதனால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியாவை நோக்கி அமெரிக்கா, பிரிட்டன் போர்க்கப்பல்களை அனுப்பியபோது இந்தியாவுக்கு உதவியாக ரஷ்யா (அப்போது சோவியத் யூனியன்) போர்க்கப்பலை அனுப்பியது. இதனால் அமெரிக்கா, பிரிட்டன் பின்வாங்கியது. இப்படியாக நம் நாட்டுடன் காலம் காலமாக நட்பில் உள்ள ரஷ்யா இப்போது பாகிஸ்தானுக்கு உதவி செய்ய இறங்கி உள்ளது.
இதனால் எப்போதுமே ரஷ்யாவுக்கும் நமக்கும் இடையே நெருங்கிய பந்தம் உள்ளது. மேலும் ரஷ்யாவிடம் இருந்து தான் நாம் அதிகமானமான பாதுகாப்பு தளவாடங்களை வாங்கி வருகிறோம். மேலும் சமீபத்திய ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது ரஷ்யாவின் எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் தான் பாகிஸ்தானின் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாத்தது. இப்படி நம் நாட்டுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பிரிக்க முடியாத பந்தம் உள்ளது.
இதற்கிடையே தான் தற்போது பாகிஸ்தான் - ரஷ்யா இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. தற்போது பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப் உள்ளார். அந்த நாடு நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. மக்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். இதனால் பிற நாடுகளின் உதவியை கோரி வருகிறது. சர்வதேச அமைப்புகளிடம் கடன் கோரி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது நம் நாட்டின் நட்பு நாடான ரஷ்யா, பாகிஸ்தானுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது.
அதாவது பாகிஸ்தானின் கராச்சி நகரின் பாகிஸ்தான் ஸ்டீல் மில்ஸ் கார்ப்பரேஷன் என்ற இரும்பு அலை உள்ளது. இந்த ஆலையை பாகிஸ்தான் ஸ்டீல் என்று சுருக்கமாக கூறுவார்கள். இந்த ஆலையை 1971ல் அமைக்க பாகிஸ்தானுக்கு சோவியத் யூனியன் (இப்போது ரஷ்யா) உதவி செய்தது.
இந்த ஆலையில் இருந்து 1.1-5 மில்லியன் டன் வரை எஃகு மற்றும் கனரக உலோகங்கள் தயாரிக்கப்பட்டன. பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான இந்த ஆலை முதலில் சிறப்பாக செயல்பட்டது.
ஆனால் நாளடைவில் ஆலை சரியாக நிர்வகிக்கப்படவில்லை. 2008 ம் ஆண்டில் இந்த ஆலை பிரச்சனையில் சிக்க தொடங்கியது. புதிய நியமனங்கள், உலகளாவிய மந்த நிலை உள்ளிட்டவற்றால் ஆலை பாதிப்பை எதிர்கொள்ள தொடங்கியது. இதனால் தற்போது இந்த ஆலை என்பது மூடப்பட்டது. அதோடு அந்த ஆலை மீது ரூ.345 மில்லியனுக்கு கடன் உள்ளது. இப்படியான சூழலில் தான் அந்த ஆலையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர ரஷ்யா உதவி செய்ய முன்வந்துள்ளது.
ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவின்பேரில் தொழில்நுட்ப குழுவினர் பாகிஸ்தான் சென்று அந்த ஆலையை சமீபத்தில் பார்வையிட்டனர். மேலும் இந்த ஆலையை மீண்டும் இயக்கி தயாரிப்புகளை மேற்கொள்வதற்கான இறுதி முடிவு வரும் ஜுலை மாதம் 30ம் தேதிக்குள் எடுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது பாகிஸ்தான் ஸ்டீல் மில்ஸை மீண்டும் திறப்பது தொடர்பாக ரஷ்யா - பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்த ஒப்பந்தம் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் அந்த ஆலையை மீண்டும் திறந்து ஸ்டீல் தயாரிப்புகளை அதிகப்படுத்தி இருநாடுகள் இடையேயான உறவை வலுப்படுத்துவது தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி பாகிஸ்தான் பிரதமர்ஷெபாஸ் ஷெரீப்பின் சிறப்பு உதவியாளர் ஹரூன் அக்தர் கூறுகையில், ‛‛ரஷ்யாவின் ஆதரவுடன் பாகிஸ்தான் ஸ்டீல் மில்ஸ்ஸை மீட்டெபுப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது'' என்று கூறியுள்ளார். இந்த ஆலை மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் அது பாகிஸ்தானின் பொருளாதாரத்துக்கு வலுசேர்க்கும். இதனால் அந்த நாடு கடனின் இருந்து மெல்ல மெல்ல மீளலாம். இது இந்தியாவுக்கு பெரும் பிரச்சனையாக மாறும். இதனால் நம் நாட்டின் நெருங்கிய நட்பில் இருக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பாகிஸ்தான் மூலமாக நம் நாட்டின் முதுகின் குத்துகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications