பாகிஸ்தானின் 'தந்தை தெரசா' ஈதி மரணம்.. மக்கள் கண்ணீர் அஞ்சலி.. ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின், 'தந்தை தெரசா' என்று வர்ணிக்கப்படும் மிகப்பெரிய சமூக சேவகரான அப்துல் சத்தார் ஈதி உடல் நலக்குறைவால் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 88.
இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின்போது குஜராத்திலிருந்து பாகிஸ்தானுக்கு குடி பெயர்ந்த ஈதி, கஷ்டப்பட்டு உழைத்து வாழ்க்கையில் உயர்ந்தவர்.
இவரது தாயார் புற்றுநோயால் மரணமடைந்த நிலையில், அதேபோல கஷ்டப்படுவோரை காப்பாற்ற அவர், உருவாக்கியதுதான் ஈதி பவுண்டேசன்.
தெருத்தெருவாக மக்களிடம் பிச்சை எடுத்து, அதில் கிடைத்த நிதியில் ஆதவற்றவர்களுக்கு உணவும் உறைவிடமும் தந்தவர்.
இப்போது பாகிஸ்தானின் மிகப் பெரிய பொது நல அறக்கட்டளை என்றால் அது, ஈதி பவுண்டேசன் தான். 500க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், 2 ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்கள், பள்ளிகள், நாடு முழுவதும் ஏராளமான ஆதவற்றோர் இல்லங்கள், 24 மணி நேரமும் இயங்கும் ஹெல்ப்லைன் பிபிஓ என விரிந்துள்ளது அவரது சமூக பணி.
இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றுபவராக இருந்தபோதிலும், பாகிஸ்தானிலுள்ள தீவிர வலதுசாரி மதவாதிகளின் எதிர்ப்பை எப்போதுமே எதிர்கொண்டு வந்தார். இதற்கு காரணம், மதமா, மனிதாபிமானமா என்ற கேள்வி வரும்போதெல்லாம், இவர் மதங்களை துச்சமென தாண்டி மனிதத்தின் பக்கம் நின்றதுதான்.
இந்தியாவை சேர்ந்த வாய் பேச முடியாத, காது கேளாத கீதா என்ற பெண்ணை 14 ஆண்டுகளாக ஈதி பவுண்டேஷன் தனது காப்பகத்தில் வைத்து பாதுகாத்தது. வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முயற்சியால், கீதா இந்தியா திருப்பி அழைத்துவரப்பட்டார். அப்போதுதான் இந்தியர்கள் மத்தியில் ஈதியும், அவரது சேவையும் பிரபலமானது.
ஈதியின் சேவை காரணமாக, அவர் பாகிஸ்தானின் 'தந்தை தெரசா' என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் ஈதி இன்று உயிரிழந்தார்.
கிட்னி பழுது காரணமாக, 2013ம் ஆண்டு முதல் ஈதி டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். உடல் நிலை மோசமான நிலையில், வெளிநாட்டில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக கடந்த ஜூன் மாதம் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி கூறியபோது, அதை ஏற்க மறுத்தார் ஈதி.
பாகிஸ்தானின் அரசு மருத்துவமனையில்தான் ஈதி சிகிச்சை பெற்று வந்தார். கடைசியாக கராச்சி மருத்துவ சென்டரில் சிகிச்சை பெற்று வந்த ஈதி, மரணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஈதியின் உடல் கராச்சியிலுள்ள தேசிய ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் விடுத்த இரங்கல் செய்தியில், ஈதிக்கு சொர்க்கத்தில் சிறந்த இடம் கிடைக்கும். மனித குலத்தின் மிகச்சிறந்த சேவகனை நாம் இழந்துவிட்டோம் என்று கூறியுள்ளார்.
நோபல் பரிசு வென்ற பாகிஸ்தான் நாட்டு சிறுமி மலாலாவும், ஈதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். "பிறரது மகிழ்ச்சிக்காகவே வாழ்ந்தவர் ஈதி என்பதால்தான் அவர் ஒரு உதாரண புருஷராகியுள்ளார். நான் இவரை போன்ற ஒரு மனிதரை பார்த்ததே கிடையாது" என்று மலாலா கூறியுள்ளார்.
இதனிடையே கராச்சியில் அரசு மரியாதையுடன் ராணுவ வீரர்களின் துப்பாக்கி குண்டு முழங்க ஈதிக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன. இதன்பிறகு, அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்காக அவரின் சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பிளாஷ் பேக்:
உலகத்துலேயே ரொம்ப ஜாலியா இருக்குறது கடவுள் மட்டும் தான்!!