ஆஸி. நிதி உதவியுடன் 8 பள்ளிகளில் பாக்.சிறுமிகளுக்கு ‘பாலியல்’ கல்வி: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்
கராச்சி: பாகிஸ்தானின் கிராமமொன்றில் இயக்கி வரும் எட்டுப் பள்ளிகளில் அங்குள்ள சிறுமிகளுக்கு பாலியல் குறித்தான எச்சரிக்கை விளக்கக் கல்வி கற்றுக் கொடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 18 கோடிக்கும் அதிகமானவர்கள் வசிக்கும் இஸ்லாமிய நாடு பாகிஸ்தான். அந்நாட்டில் வாழும் பெண்களுக்கு என்று பலக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அவர்கள் வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே எட்டி பார்ப்பது கூடாது. திருமண விழாவில் கலந்து கொள்ளும்போது நடனமாட கூடாது.

இது போன்ற கட்டுப்பாடுகளை மீறும் பெண்களுக்கு கடுமையான தண்டனைகள் கூட வழங்கப் படுகின்றன. இந்நிலையில், அங்குள்ள கிராமம் ஒன்றில் சிறுமிகளுக்கு பாலியல் கல்வி கற்றுத் தரப்படுகிறதாம்.
பாலியல் கல்விக்கு வரவேற்பு...
பாகிஸ்தானில் பாலியல் கல்வி என்பது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் பெரும்பாலும் எந்த பகுதியிலும் வழங்கப்படுவதில்லை. ஆனால், வறுமையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சிந்த் மாகாணத்தில் உள்ள ஜோஹி கிராம பகுதியில் வசிக்கும் கிராமவாசிகள் பாலியல் கல்வியை வரவேற்பதாக அங்குள்ள ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
8 வயதுமுதல்...
இங்கு கிராம ஷாதாபாத் அமைப்பினரால் நடத்தப்படும் எட்டு உள்ளூர் பள்ளிகளில் சுமார் 700 சிறுமிகள் படித்து வருகின்றனர். அவர்களுக்கான பாலியல் கல்வி அவர்களது எட்டு வயதில் இருந்து வழங்கப் படுகிறது.
வளர் பருவ மாற்றங்கள்....
அவர்களது உடலில் ஏற்படும் மாற்றங்கள், அவர்களது உரிமைகள் என்ன மற்றும் அவர்கள் தங்களை பாதுகாத்து கொள்வது எப்படி என்பன போன்று பாடங்கள் அமைந்துள்ளன.
தற்காப்பு நடவடிக்கைகள்...
அதன்படி, வரிசையாக அமர்ந்துள்ள மாணவிகளிடம் ஆசிரியர், உடலில் ஏற்படும் மாற்றம் குறித்து விவரிக்கிறார். அதன் பின் அவர், அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் உங்களை தொட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற கேள்வி எழுப்புகிறார்.
இப்படியெல்லாம் செய்யலாம்...
அதற்குப் பதிலாக ஒரு மாணவி சத்தம் போட்டு அலற வேண்டும் என்கிறார். மற்றொரு மாணவி கடித்து விட வேண்டும் என கூறுகிறார். உங்களது நகங்களால் அவர்களை கடினமாக பிராண்டி விட வேண்டும் என்று இன்னொரு மாணவி கூறுகிறார்.
பாலியல் அத்துமீறல்...
மனைவியை வற்புறுத்தி கணவர் பாலியல் உறவு கொள்வது குற்றமாகக் கொள்ளப்படாத பாகிஸ்தானில், திருமணத்திற்கு பின்பு மனைவியின் ஒப்புதல் இல்லாமல், நடைபெறும் பாலியல் அத்துமீறல் என்பது குற்றம் என மாணவிகளுக்கு கற்பிக்கப் படுகிறது.
ஆஸ்திரேலிய நிறுவன உதவி...
இந்த எட்டு பள்ளிகளுக்கும் ஆஸ்திரேலிய நிறுவனமான பி.எச்.பி. பில்லிடன் நிதி அளிப்பதாகவும், அந்நிறுவனம் அருகில் உள்ள இடத்தில் எரிவாயு தொழிற்சாலையை இயக்கி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனபோதும் கிராமத்தினரின் சொந்த விருப்பத்தின் பேரிலேயே பள்ளியில் பாலியல் கல்வி கற்றுத் தரப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
பருவ மாற்றங்கள் நோயல்ல...
இது தொடர்பாக பாலியல் கல்வியைப் போதிக்கும் ஆசிரியை சாரா பலோச் கூறும்போது, பருவ வயதை அடைகிறபோது ஏற்படும் மாற்றங்கள் அவமானகரமானவை என்று மாணவிகள் கருதுகின்றனர். இதனை தங்களது பெற்றோரிடம் அவர்கள் கூறுவதில்லை. தாங்கள் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளோம் என கருதி கொள்கின்றனர்' எனத் தெரிவித்துள்ளார்.
பருவ வயது குறித்த புரிதல்...
இந்த அமைப்பின் தலைவர் அக்பர் லஷாரி கூறும்போது, பாலியல் கல்வி குறித்து பேசுவதற்கு மக்கள் விரும்புவதில்லை. ஆனால் அது நம்முடைய வாழ்வின் உண்மையான விஷயம். கிராமத்தில் வசிக்கும் சிறுமிகளில் பெரும்பாலானவர்கள், தாங்கள் பருவ வயதினை அடைகிறோம் என்பது குறித்த புரிதல் இல்லாமலேயே உள்ளனர். அந்த வயதை கடக்கவும் செய்கின்றனர். அவர்களில் பலர், பாலியல் உறவு குறித்த விவரங்கள் தெரியாமலேயே திருமணம் என்ற பந்தத்தில் நுழைகின்றனர் என்றார்.
அனுமதிக்க இயலாது...
ஆனால், அனைத்து பாகிஸ்தானிய தனியார் பள்ளிக்கூட அமைப்பின் தலைவர் மிர்சா காஷிப் அலி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இது எங்களது அரசியலமைப்பு மற்றும் மதத்திற்கு எதிரானது. நீங்கள் மேற்கொள்ளாத ஒரு காரியத்தை குறித்து அறிந்து கொள்வதின் நோக்கம் என்ன? பள்ளி அளவில் இது அனுமதிக்கப்பட கூடாது என்று கூறுகிறார்.
இது தொடர்பாக தகவலறிந்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார் சிந்த் மாகாண கல்வி அமைச்சர் நிசார் அகமது. மேலும், அவர் ‘சிறுமிகளுக்கு பாலியல் கல்வியா? அவர்கள் எப்படி அதனை நடத்தலாம்? எங்களது பாட திட்டத்தில் அது இல்லை. தனியார் அல்லது பொது பள்ளிக்கூடம் எதுவாக இருந்தாலும் இதற்கு அனுமதி இல்லை என்று கூறுகிறார்.
இஸ்லாமிய சட்டப்படி....
அந்நாட்டின் மத அமைப்பான பாகிஸ்தான் உலமா கவுன்சில் தலைவரான தாஹிர் அஷ்ரபி கூறும்போது, ‘இஸ்லாமிய சட்டத்திற்கு உட்பட்டு இத்தகைய பாடங்கள் அனுமதிக்கப்படுகின்றன. ஆசிரியர்கள் பெண்களாக இருந்தால், ஷரியாவுக்கு (மத சட்டம்) உட்பட்டு மாணவிகளுக்கு அது போன்ற தகவல்களை அவர்கள் தெரிவிக்கலாம்' என விளக்கமளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications