‛பிரிக்ஸ்' கூட்டமைப்பில் இணைய விண்ணப்பித்த பாலஸ்தீனம்.. வரவேற்ற சீனா.. இந்தியா ‛ஓகே' சொல்லுமா?
காசா: இந்தியா, ரஷ்யா, பிரேசில், சீனா, தென்ஆப்பிரிக்கா, ஈரான் உள்பட 10 நாடுகள் அங்கம் வகிக்கும் ‛பிரிக்ஸ்' கூட்டமைப்பில் இணைய பாலஸ்தீனம் விண்ணப்பம் செய்துள்ளது. இதனை சீனா வரவேற்றுள்ள நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
‛பிரிக்ஸ்' கூட்டமைப்பில் மொத்தம் 10 நாடுகள் உள்ளன. இந்த கூட்டமைப்பில் முதலில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா , தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் மட்டுமே இருந்தன. அதன்பிறகு தொடர்ந்து விரிவாக்கப்பட்டு வருகிறது.

புதிய நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த 2024ம் ஆண்டில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் இணைந்தன. 2015ல் இந்தோனேஷியா கைகோர்த்தது.
இப்போது பிரிக்ஸ் கூட்டமைப்பில் மொத்தம் 10 நாடுகள் உள்ளன. புதிய நாடுகள் பலவும் இந்த கூட்டமைப்பில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றன. அதற்கான விண்ணப்பங்களை செய்துள்ளன. அந்த வகையில் பாலஸ்தீனம் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய ஆர்வம் காட்டி உள்ளது. இதற்கான விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி, ரஷ்யாவுக்கான பாலஸ்தீன தூதர் அப்தல் ஹபிஸ் நோபல் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக ரஷ்யா பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், ‛‛பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய ஆர்வம் காட்டி விண்ணப்பம் செய்துள்ளோம். அதேபோல் எங்களுக்கு சில நிபந்தனைகள் உள்ளது உங்களுக்கு தெரியும். அந்த நிபந்தனைகள் ஏற்கும்வரை பாலஸ்தீனம் சிறப்பு விருந்தினராக பிரிக்ஸ் கூட்டமைப்பில் பங்கேற்கும் என்று நம்புகிறேன். எங்களின் விண்ணப்பத்துக்கு இன்னும் பதில் வரவில்லை'' என்றார்.
பாலஸ்தீனத்தின் இந்த முடிவை சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கு ஜிகான் வரவேற்றுள்ளது. ‛பிரிக்ஸ் கூட்டமைப்பில் ஒரே மனநிலை கொண்ட நாடுகள் இணைவது வரவேற்கப்படுகிறது. வளர்ந்து வரும் மார்க்கெட் மற்றும் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்புக்கு பிரிக்ஸ் முக்கிய தளமாக உள்ளது. சர்வதேச உறவுகளில் பன்முகத்தன்மை மற்றும் சிறந்த ஜனநாயகத்துக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இந்த கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டமைப்பு உலகளாவிய தெற்கு நாடுகளின் அங்கீகாரத்துடன் செயல்பட்டு வருகிறது'' என்று கருத்து தெரிவித்தார்.
பாலஸ்தீனத்தை இன்னும் பல நாடுகள் அங்கீகரிக்கவில்லை. இஸ்ரேல் அந்த நாட்டை அங்கீகரிக்கவில்லை. மேலும் பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. ஆனால் நம் நாடு பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. அதேவேளையில் இஸ்ரேலுடன் நல்ல நட்பில் உள்ளது. இதனால் பாலஸ்தீனத்தை பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர்க்கும் விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேவேளையில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிரேசில், ரஷ்யா, சீனா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேஷியா , தென்ஆப்பிரிக்கா உள்பட பிற நாடுகள் பாலஸ்தீனத்துடன் நல்ல உறவில் தான் இருக்கின்றன. இதனால் பிரிக்ஸ் கூட்டமைப்பில் பாலஸ்தீனம் இணையலாம் என்கின்றனர் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications