என் அப்பாவை திருப்பிக் கொடுங்க: மாயமான ஏர்ஏசியா விமான கேப்டனின் மகள் உருக்கம்
ஜகர்தா: அப்பா வீட்டுக்கு வாருங்கள் என்று மாயமான ஏர் ஏசியா விமானத்தின் கேப்டன் இரியான்டோவின் மகள் ஏஞ்சலா சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் உள்ள ஜுவான்டா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூருக்கு கிளம்பிய ஏர் ஏசியா விமானம் க்யூஇசட்8501 ஞாயிற்றுக்கிழமை மாயமானது. இந்நிலையில் விமானம் இந்தோனேசிய கடலில் விழுந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேடல் பணியும் துவங்கியுள்ளது.

விமானத்தை இந்தோனேசியாவைச் சேர்ந்த இரியான்டோ ஓட்டினார். அவர் இதுவரை 6 ஆயிரத்து 100 மணிநேரம் விமானம் ஓட்டியவர். துணை விமானியான பிரான்சைச் சேர்ந்த இம்மானுவல் ப்ளெசல் 2 ஆயிரத்து 275 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளவர்.
இந்நிலையில் கேப்டன் இரியான்டோவின் மகள் ஏஞ்சலா சமூக வலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது,
அப்பா திரும்பி வந்துவிடுங்கள். எனக்கு நீங்கள் வேண்டும். என் அப்பாவை என்னிடம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். அப்பா வாங்க நான் உங்களை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இரியான்டோவுக்கு மனைவி மற்றும் பள்ளி செல்லும் 2 மகள்கள் உள்ளனர். மனைவி வேலை பார்க்கவில்லை.
மாயமான ஏர் ஏசியா விமானத்தில் 16 குழந்தைகள், ஒரு பச்சிளம் குழந்தை உள்பட 155 பயணிகள் இருந்தனர். பயணிகளில் 149 பேர் இந்தோனேசியர்கள், 3 பேர் தென் கொரியாவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் மலேசியாவைச் சேர்ந்தவர், ஒருவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications