பாகிஸ்தானில் 400 பயணிகளுடன் சென்ற ரயில் கடத்தல்.. 100 பேரை பிணைக்கைதிகளாக சிறைபிடித்த கிளர்ச்சி குழு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை கிளர்ச்சியாளர்கள் குழு கடத்தியுள்ளது. ரயிலில் இருந்த பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த 100 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து இருப்பதகாவும் பலோச் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சி குழு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பலோசிஸ்தான் மாகாணம் உள்ளது. பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் கோரி அங்கு கிளச்சியாளர்கள் ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள். பலோசிஸ்தான் சுதந்திர ராணுவம் என்ற பெயரில் இயங்கி வரும் கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தான் அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளனர்.

இந்த நிலையில்தான், ரயில் ஒன்றை கடத்தியுள்ளதாக கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளது பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவர் நகரில் இருந்து பலோசிஸ்தானில் உள்ள குவெட்டா நகருக்கு ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. 9 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் சுமார் 400 பயணிகள் பயணம் செய்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இந்த ரயிலை கிளர்ச்சியாளர்கள் குழு கடத்தியுள்ளதாகவும் 100 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பலோசிஸ்தான் விடுதலை ஆர்மி (BLA) என்ற அந்த கிளர்ச்சி குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் தங்களுக்கு எதிராக நடவடிக்கையை தொடங்கினால் பிணைக்கைதிகள் கொல்லப்படுவார்கள் எனவும் எச்சரித்துள்ளது.
ரயில்வே தண்டவாளத்தை கிளர்ச்சியாளர்கள் தகர்த்து ரயிலை நிறுத்த வைத்ததகாகவும் அதன்பிறகு ரயிலில் அவர்கள் ஏறி கைப்பற்றியதாகவும் சொல்லப்படுகிறது. பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட அந்த இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த ரயிலில் பாதுகாப்பு படையினர் சென்றதாகவும் அவர்களில் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் பலோச் விடுதலை ராணுவம் அறிவித்துள்ளது.
ரயிலில் இருந்த பயணிகளை விடுவித்துவிட்டதாகவும் பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்தவர்களை மட்டுமே பிடித்து வைத்து இருப்பதகாவும் கூறிய பலோச் ராணுவம் விடுதலை, ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் அனைவரும் கொல்லப்படுவார்கள் எனவும் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications