போருக்கு எதிர்ப்பு: பெப்சி, கோக், மெக் டொனால்ட்..ரஷ்யாவில் "பூட்டு போட்ட" பன்னாட்டு நிறுவனங்கள்
மாஸ்கோ: உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. தற்போது பன்னாட்டு பெரு நிறுவனங்களும் உக்ரைன் மீதான தாக்குதலை கண்டித்து, ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. குறிப்பாக மெக் டொனால்ட்ஸ், ஸ்டார் பக்ஸ், பெப்சி, கொக்க கோலா, ஜெனரல் எலெக்ட்ரிக் உள்ளிட்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் வர்த்தகத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
அமெரிக்காவின் சிகாகோ நகரை தலைமையிடமாக கொண்டுள்ள உலக புகழ்பெற்ற பர்கர் தயாரிப்பு உணவகமான மெக் டொனால்ட்ஸ் ரஷ்யாவில் உள்ள 850 கடைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.

மெக் டொனால்ட்
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயலதிகாரியுமான கிரிஸ் கெம்சின்ஸ்கி எழுதியுள்ள கடிதத்தில், "ரஷ்யாவில் உள்ள கடைகளை மூடினாலும் அங்கு பணிபுரியும் 62,000 ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவோம். அவர்கள் எங்கள் நிறுவன வளர்ச்சிக்காக மனதார உழைத்தவர்கள். இது எங்களை போன்ற நிறுவனங்களுக்கு பெரும் சவாலான காலகட்டம். மீண்டும் கடைகளை எப்போது திறப்போம் என்பது குறித்து உறுதியாக சொல்ல முடியாது." எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டார் பக்ஸ்
அதேபோல் உயர்தர கஃபேவான ஸ்டார் பக்ஸும் ரஷ்யாவில் உள்ள 130 கடைகளை மூடப்போவதாக அறிவித்து இருக்கிறது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி கெவின் ஜான்சன் ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "உக்ரைனுக்கு தார்மீக ஆதரவு அளிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். ரஷ்யாவில் உள்ள 2,000 ஸ்டார்பக்ஸ் ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படாது." எனக் கூறியுள்ளார்.

கோக கோலா
உலக புகழ்பெற்ற குளிர்பான நிறுவனமான கோக கோலாவும் ரஷ்யாவில் தனது விற்பனையை நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது. அந்நாட்டில் உள்ள கோக கோலாவிற்கு சொந்தமான 10 பாட்டில் ஆலைகளையும் அந்நிறுவனம் முடக்கியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமான கொண்டுள்ள பெப்சிகோ நிறுவனமும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை கண்டித்து, அந்நாட்டுடனான வர்த்தகத்தின் ஒரு பகுதியை நிறுத்தியுள்ளது. அதாவது பெப்சி குளிர்பான விற்பனையையும், அந்நாட்டில் உள்ள தங்கள் நிறுவனத்தின் முதன்மையான முதலீடுகளையும் முழுவதுமாக நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. ஆனால், பெப்சி நிறுவனத்தின் பால் உற்பத்தி மற்றும் குழந்தைகளுக்கான உணவுப் பொருள் உற்பத்தி தொடர்ந்து நடைபெறும் என அறிவித்துள்ள பெப்சி, இதன் மூலம் ரஷ்யாவில் உள்ள 20,000 தொழிலாளர்களும் 40,000 விவசாயிகளும் பயனடைவார்கள் எனத் தெரிவித்து இருக்கிறது.
Recommended Video

எலக்ட்ரிக் பொருட்கள்
அதேபோல் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனமும் மருத்துவ கருவிகள் மற்றும் மின் விநியோக திட்டங்களை தவிர்த்து ஏனைய பணிகளை ரஷ்யாவில் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. கே.எஃப்.சி. மற்றும் பிஸ்சா ஹட்டின் தாய் நிறுவனமான யம் பிரான்ட்ஸும் ரஷ்யாவில் உள்ள 70 உணவகங்களை மூடப்போவதாக அறிவித்து இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் ரஷ்யாவில் வர்த்தகத்தை நிறுத்துவதால் அந்நாட்டுக்கும் நிறுவனங்களுக்கும் பொருளாதார நடவடிக்கை இழப்பு ஏற்படும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications