ஃப்ரிட்ஜுக்குள் 20 மணி நேரம்.. பிலிப்பைன்ஸ் சிறுவனின் திக் திக் நிமிடங்கள் - கடைசியில் என்ன நடந்தது?
மணிலா: பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் இருந்து ஃப்ரிட்ஜுக்குள் பதுங்கியபடி 11 வயது சிறுவன் உயிர்பிழைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பிலிப்பைன்ஸின் பேபே நகரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக ஏராளமான வீடுகள், சாலைகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
அந்நாட்டின் லேய்ட் மாகாணத்தில் மெகி என்ற பெயரில் வீசிய புயலால் கனமழையும், வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டது.

ஆற்றங்கரையோரம் ஒரு குளிர்சாதன பெட்டி
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீயணைப்பு படை வீரர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்குள்ள ஆற்றங்கரை ஓரத்தில் மண்ணில் லேசாக புதைந்தபடி ஒரு குளிர்சாதன பெட்டி கிடந்துள்ளது. அதை எடுத்த தீயணைப்புப் படை வீரர்களுக்கு ஒரே அதிர்ச்சி. ஆம், அதில் 11 வயது சிறுவன் உயிரோடு இருப்பதை கண்ட வீரர்களால் அவர்களது கண்களையே நம்ப முடியவில்லை.

ஃப்ரிட்ஜுக்குள் அடைக்கலம்
நடந்த விபரம் குறித்து அந்த சிறுவனிடம் வீரர்கள் விசாரித்ததில், பெயர் சிஜே ஜாஸ்மே என்பது தெரியவந்தது. அதிக வேக காற்றுடன் புயல் வீசியதை கண்டு அச்சமடைந்ததால் பிரிட்ஜுக்குள் சென்று ஒளிந்துகொண்டதாக அந்த சிறுவன் தெரிவித்துள்ளார். ஃப்ரிட்ஜை திறந்து சிறுவனை பார்த்தவுடன் அவர் சொன்ன முதல் வார்த்தை 'பசிக்கிறது' என்பதுதான் என அவரை மீட்ட தீயணைப்பு படை வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

காலில் அறுவை சிகிச்சை
ஃப்ரிட்ஜிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன் ஸ்ட்ரெட்சரில் வைத்து எடுத்துச் செல்லப்படும்போதெல்லாம் பசிக்கிறது என்றே கூறியுள்ளார். சிறுவன் ஜாஸ்மே விழிப்புடனே இருந்ததாகவும், நிலச்சரிவின்போது ஃப்ரிட்ஜ் உருண்டு புரண்டதில் அவரது கால் மட்டும் உடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு உடைந்த காலில் அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாய், தங்கையை காணவில்லை
இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் பிலிப்பைன்ஸ் காவல்துறை, சிறுவன் நல்ல நிலையில் இருப்பதாகவும், அவரது தாய் மற்றும் தங்கையை காணவில்லை என்றும், அவரது தந்தை வேறொரு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துவிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அதேபோல் சிறுவனின் 13 வயது மூத்த சகோதரனும் நிலச்சரிவிலிருந்து தப்பித்து இருப்பார் என்று போலீசார் நம்புகின்றனர்.

172 பேர் உயிரிழப்பு
பேபே நகரில் ஏற்பட்ட இந்த பயங்கர நிலச்சரிவில் சிக்கி 172 பேர் உயிரிழந்துள்ளனர். 200 பேர் படுகாயமடைந்து இருக்கின்றனர். இந்த புயல் காரணமாக அந்த மாகாணத்தைவிட்டு 20 கோடி பேர் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் சேரும், சகதியுமாக காட்சி தருவதால் மீட்புப்பணிகள், மற்றும் காணாமல் போனவர்களை தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications