பூமிக்குள் புதைந்து 46 பேர் பலி.. பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பெரும் சோகம்
மணிலா: பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. 7.8 என்ற ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் இடிபாடுகளுக்குள் சிக்கி மொத்தம் 46 பேர் வரை பலியாகி உள்ளனர்.
பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியான மிண்டானாவ் (Mindanao) கடற்கரை பகுதியில் ஜெனரல் சாண்டோஸ் நகர் உள்பட அதனை சுற்றிய இடங்களில் நேற்று முன்தினம் திடீரென்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 7.8 என்று பதிவான நிலநடுக்கத்தில் கட்டடங்கள் சீட்டு கட்டுகள் போல் சரிந்தன. இதனால் பொதுமக்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர்.
பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளியில் தஞ்சமடைந்தனர். பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இடிந்த கட்டிடங்கள் மற்றும் நிலச்சரிவில் ஏராளமான மக்கள் சிக்கினர். அவர்களை மீட்கும் பணி உடனடியாக தொடங்கியது. இன்று 3வது நாளாக மீட்பு பணி நடந்து வருகிறது.
இதுவரை மொத்தம் 46 பேர் வரை பலியாகி உள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் டாவோ ஆக்சிடென்டல் (Davao Occidental) மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் நிலச்சரிவு மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இன்னும் 17 பேர் வரை மாயமாகி உள்ளனர். அவர்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. அவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
முன்னதாக நேற்று முன்தினம் நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் பிலிப்பைன்ஸை சுற்றிய தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. அதிர்ஷ்டவசமாக சுனாமி ஏற்படவில்லை. மாறாக அலைகள் சீற்றத்துடன் வந்தன. சுனாமி வந்திருந்தால் இன்னும் நிலைமை மோசமாகி இருக்கும்.












Click it and Unblock the Notifications