"புதிய முகம்.." அடையாளமே தெரியாது.. போலீசாரிடம் இருந்து தப்பிக்க கிரிமினல்கள் போடும் பகீர் பிளான்
மணிலா: தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் கிரிமினல்கள், கேங்ஸ்டார்கள் அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க பிளாஸ்டிக் சர்ஜிரி செய்து கொள்கிறார்களாம். இந்த பிளாஸ்டிக் சர்ஜிரி தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டு இருப்பதால் ஆப்ரேஷனுக்கு பிறகு அவர்களைக் கண்டுபிடிக்க அதிகாரிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எந்தவொரு நாடாக இருந்தாலும் கிரிமினல்களை பிடிப்பது எப்போதுமே போலீசாருக்கு சவால் தான். போலீசாரிடம் இருந்து தப்பிக்க கிரிமினல்கள் புது புது ஐடியாக்களை யோசிப்பார்கள்.

ஆனால், இங்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் கிரிமினல்கள் செய்த செயலை நீங்கள் வேறு எங்கும் கேள்விப்பட்டு இருக்க முடியாது. போலீசாரை ஏமாற்ற அந்தளவுக்கு இந்த கிரிமினல்கள் நுட்பமாக யோசித்துள்ளனர். யார் அவர்கள்.. என்ன செய்தார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பிலிப்பைன்ஸ்: இதற்கிடையே தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பிலிப்பைன்ஸ் நாட்டில் சில மருத்துவமனைகள் மோசக்காரர்கள், தேடப்பட்டு வருவோர் லிஸ்டில் இருப்போருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவர்கள் முகத்தை மாற்றுவதை அதிகாரிகள் தெரிவித்தனர். பிளாஸ்டிக் சர்ஜரி காரணமாக அவர்கள் முகம் முழுமையாக மாறிவிடுவதால் அதிகாரிகளால் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய முடிவதில்லையாம். இது அங்கே மிகப் பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது.
மணிலாவின் தெற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது தான் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதுபோன்ற இரண்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மேலும் சில மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவற்றை மூட வைக்க அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆளே மாறிடுவோம்: இந்த மருத்துவமனைகளில் இருந்து முடி, பல் ஆகியவற்றை மாற்றும் கருவிகள், தோல் நிறத்தை மாற்றும் மருந்துகளை அதிகாரிகள் கைப்பற்றினர். இவற்றை வைத்து எந்தவொரு நபரையும் அப்படியே புதிய ஆள் போல மாற்றிவிட முடியுமாம். அதன் பிறகு போலீசாரே எவ்வளவு முயன்றாலும் இந்த கிரிமினல்களை கண்டறிவது கடினமாகிவிடும்.
பிலிப்பைன் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களை நடத்துவோர் போகோஸ் என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் ஆன்லைன் கேமிங் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றுவது முதல் ஆள்கடத்தல் வரை பல பயங்கரமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்த கேங்கில் உள்ளவர்கள் யாராவது தேடப்பட்டு வரும் பட்டியலில் சேர்க்கப்பட்டால் அவர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் முகத்தை மாற்றிக் கொள்கிறார்களாம்.
கைது: இந்த விவகாரம் தொடர்பாக வியட்நாமை சேர்ந்த இரு மருத்துவர்கள் மற்றும் சீனாவைச் சேர்ந்த ஒரு மருத்துவர் உட்பட 5 பேரை அதிகாரிகள் இதுவரை கைது செய்துள்ளனர். இவர்கள் யாரிடமும் பிலிப்பைன்ஸில் பணிபுரிய உரிமம் இல்லையாம். அதேநேரம் இப்போது ஒரு மருத்துவமனை மட்டுமே அதிகாரிகள் சோதனையில் சிக்கியுள்ள நிலையில், வரும் நாட்களில் மேலும் சில மருத்துவமனைகளும் இதில் மாட்ட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பிலிப்னைஸ் அதிகாரிகள் கூறுகையில், "இந்த மருத்துவமனைகளை போகோ மருத்துவமனை என்றே சொல்லலாம். போகோ அமைப்பில் உள்ள கிரிமினல்கள் தான் இதை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இவை வெளியில் வழக்கமான கிளினிக்குகள் போல் தெரிகிறது.. ஆனால் நீங்கள் உள்ளே நுழைந்தவுடன், அவர்கள் வைத்திருக்கும் தொழில்நுட்பத்தைப் பார்த்தால் ஒரு நிமிடம் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். இவர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எந்தவொரு அடையாள அட்டைகளையும் கேட்பதில்லை. கிரிமினல் உட்பட யாராக இருந்தாலும் ஆப்ரேஷன் செய்துவிடுகிறார்கள்" என்கிறார்கள்.
கண்டறிந்தது எப்படி: கடந்த டிசம்பர் 2022இல் சீன மாஃபியா உறுப்பினர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் முகத்தை மாற்றியது விசாரணையில் தெரிய வந்தது. அதை வைத்து போலீசார் நடத்திய விசாரணையிலேயே இந்த கேங்கை கண்டுபிடித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications