நடுவானில் திக் திக்..அச்சத்தில் உறைந்த பயணிகள்..அவசர அவசரமாக தரையிறங்கிய நேபாளம் விமானம்..என்னாச்சு?
78 பயணிகளுடன் நடுவானில் சென்று கொண்டிருந்த விமானத்தின் என்ஜினில் தீ பிடித்ததாக அறிகுறி (இண்டிகேஷன்) விமானிக்கு காட்டியதையடுத்து அந்த விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது.
காத்மாண்டு: 78 பயணிகளுடன் நடுவானில் சென்று கொண்டிருந்த போது விமானத்தின் வலது பக்க என்ஜினில் தீ பிடித்ததாக அறிகுறி (இண்டிகேஷன்) விமானிக்கு காட்டியது. இதையடுத்து அந்த விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. நேபாளத்தில் விமானம் அவசர அவசரமாக தரையிறங்கியது காத்மாண்டு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். உலக அளவில் விமான விபத்துக்கள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக நேபாளம் உள்ளது.
மலைப்பிரதேசங்களை அதிகம் கொண்டது நேபாளம். அங்கு பனிமூட்டமான வானிலையே அதிகம் நிலவும். மலைப்பிரதேசம் என்பதால், ஓரளவிற்குச் சமதளமான பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அதில்தான் ஓடுதளமும், விமான நிலையமும் நேபாளத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

விமான விபத்து
இதனால் விமானத்தை தரையிறக்குவதிலும் பல சவால்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. விமானநிலைய கட்டமைப்புகள் மற்றும் வானிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் என அடிக்கடி விபத்து நடப்பதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் கூட நேபாளத்தின் யெட்டி ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 72 பயணிகளும் உயிரிழந்தனர்.

அவசர அவசரமாக தரையிறங்கியது
இந்த விமான விபத்துக்கு பைலட் செய்த தவறுகளே காரணமாக இருக்கலாம் என்று முதல் கட்ட அறிக்கை வெளியாகி இருந்தது. இந்த விமான விபத்து நடைபெற்று இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இன்று நேபாளத்தில் விமானத்தின் என்ஜினில் தீ பிடித்ததற்கான இண்டிகேஷன் பைலட்டிற்கு வந்ததால் அவசர அவசரமாக விமானம் தரையிறங்கியது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

என்ஜினில் தீ பிடித்ததாக
நேபாளத்தின் ஸ்ரீ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டேஷ் 8 டர்போபார்ப் என்ற விமானம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து பைரஹவா நகருக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் விமான சிப்பந்திகள், பயணிகள் என மொத்தம் 78 பேர் பயணித்தனர். இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது விமானத்தின் வலது பக்க என்ஜினில் தீ பிடித்ததாக அறிகுறி (இண்டிகேஷன்) விமானிக்கு காட்டியது. இதனால், உடனடியாக விமானத்தை காத்மாண்டு விமான நிலையத்தில் தரையிறக்க விமானி அனுமதி கோரினார்.

பயணிகள், விமான சிப்பந்திகள்
விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளும் அனுமதி கொடுத்ததும் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானம் தரையிரங்கியதும் விரைந்து வந்த தொழில் நுட்ப குழுவினர் உடனடியாக ஆய்வு செய்தனர். எனினும், விமானம் தரையிறங்கிய பிறகு என்ஜினில் தீ பிடித்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. நேபாளத்தில் விமானம் அவசர அவசரமாக தரையிறங்கியது காத்மாண்டு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பயணிகள் மத்தியில் சிறிது நேரம் அச்சம் நிலவியது.












Click it and Unblock the Notifications