தென்னாப்பிரிக்கா அதிபர் ஜூமாவுடன் பிரதமர் மோடி சந்திப்பு- ராணுவ மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு!
பிரிட்டோரியா: தென்னாப்பிரிக்கா அதிபர் ஜேக்கப் ஜூமாவுடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக அதிபர் மாளிகையில் பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்காவின் மொசாம்பிக், தென்னாப்பிரிக்கா, தான்சானியா, கென்யா ஆகிய நாடுகளுக்கான 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதல் கட்டமாக மொசாம்பிக் நாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 34 ஆண்டுகளுக்குப் பின்னர் மொசாம்பிக் சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி.
Second leg of PM's Africa tour begins in South Africa. PM lands in Pretoria. pic.twitter.com/j33lpVawnI
— PMO India (@PMOIndia) July 7, 2016
மபுடோ நகரில் தொழில்நுட்ப வளர்ச்சி மையத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள மாணவர்களிடையே கலந்துரையாடினார். பின்னர் அந்த மையத்துக்கு 4 பேருந்துகளை இந்தியா சார்பில் மோடி வழங்கினார்.
இந்தியா-மொசாம்பிக் நாடுகளுக்கு இடையே உள்நாட்டு பாதுகாப்பு, ராணுவ ஒத்துழைப்பு, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. பின்னர் சுற்றுப்பயணத்தின் 2-வது கட்டமாக தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா நகருக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்க நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மஷாபானே, சிறுதொழில்கள் துறை அமைச்சர் லின்டிவே ஸுலு ஆகியோர் பிரிட்டோரியா விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சிகப்பு கம்பள வரவேற்பு அளித்து வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா, துணை அதிபர் சிரில் ரமபோஸா ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். முன்னதாக அதிபர் மாளிகையில் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் நாளை தான்சானியா நாட்டுக்கு மோடி புறப்பட்டுச் செல்கிறார்.