சுதந்திர இந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி... மீடியா ஜாம்பவான் முர்டோச் 'ஆஹா ஓஹோ'!
வாஷிங்டன்: இந்திய சுதந்திரத்திற்கு பிறகு நான் கண்ட சிறந்த பிரதமர் நரேந்திரமோடி என்று, உலக பத்திரிகை துறை ஜாம்பவான் ருபெர்ட் முர்டோச் புகழாரம் சூட்டியுள்ளார். மோடி சிறந்த கொள்கைகளை வகுத்துள்ளதாகவும், ஆனால், இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் கொள்கைகளை செயல்படுத்துவதுதான் பெரும் சிரமமான காரியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பிரதமர் மோடி, அமெரிக்க நேரப்படி நேற்று நியூயார்க்கிலுள்ள புகழ்பெற்ற வால்டோர்ப் அஸ்டோரியா ஹோட்டலில் உலகின் முன்னணி நிறுவன தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.

அதில் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற முன்னணி பத்திரிகைகளை கையாளும் உலக பத்திரிகை ஜாம்பவான் ருபெர்ட் முர்டோச்சும் ஒருவர். சந்திப்புக்கு பிறகு அவர் வெளியிட்ட டிவிட்டில், "பிரதமர் மோடியுடனான சந்திப்பு நேரம் சிறப்பானது. சுதந்திரத்திரத்துக்கு பிறகு சிறந்த கொள்கைகளுடன் கூடிய சிறந்த பிரதமராக மோடி உள்ளார். ஆனால் பன்முகத்தன்மை கொண்ட இந்தியா போன்ற நாட்டில், கொள்கைகளை செயல்படுத்துவதுதான் சிரமம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடியுடனான சந்திப்புக்கு பிறகு அமெரிக்க தொழிலதிபர்கள் பலரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மோடி அரசு வந்தபிறகு பொருளாதாரத்தை சீர்திருத்தும் பணிகள் நடைபெறுவதாகவும், ஆனால், அதில் இன்னும் வேகம் தேவை எனவும் பலரும் வலியுறுத்தினர். என்ர்ஸ்ட் அன்டு யங்க் நிறுவன சி.இ.ஓ, மார்க் வெயின்பெர்கர் கூறுகையில், "இந்தியாவில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களின் வேகம் குறித்துதான் நாங்கள் கவலைப்படுகிறோம். வேகமாகவும், துரிதமாகவும் முடிவுகள் எடுக்கப்படுவதைதான் தொழிலதிபர்கள் விரும்புகிறோம்" என்றார்.
ஜேபி மோர்கன் நிறுவன சி.இ.ஓ ஜேம்ஸ் டைமோன் கூறுகையில், ஏற்கனவே இந்தியா நிறைய சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதே பாதையில் தொடர்ந்து செல்வதையே நாங்கள் விரும்புகிறோம். அன்னிய நேரடி முதலீட்டுக்கு வாய்ப்பு கிடைத்தால் அந்த பாதையில் பயணிப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications