ஜி20 மாநாடு.. இத்தாலியில் பிரதமர் நரேந்திர மோடி.. மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை!
ரோம்: ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறுகிறது. ஜி 20 நாடுகள் கூட்டமைப்பில் இந்தியாவும் ஒரு உறுப்பினராக உள்ளது.
எனவே இந்த கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலி பிரதமர் மரியோ டிரகி அழைப்பு விடுத்திருந்தார்.
இரு கண்களும் தானம்.. இறந்த பிறகும் புனித் ராஜ்குமார் செய்த புனித செயல்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!
ரோமில் பிரதமர் மோடி
இந்த நிலையில் பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்க இத்தாலி தலைநகர் ரோம் சென்றடைந்தார். இத்தாலிய அரசு உயர் அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் மிகவும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், அங்கு வசிக்கும் இந்தியர்களும் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதனை தொடர்ந்து ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்வலஸ் மிக்கேல், ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் ஆகியோரை மோடி கூட்டாக சந்தித்து பேசினார்.
மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை
இதன்பின்னர் பிரதமர் மோடி, பியாகா காந்தி பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் இத்தாலிய மொழியில் குறிப்பிட்ட மோடி, '' உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு தைரியம் மற்றும் உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கும் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் வாய்ப்பு ரோமில் எனக்கு கிடைத்தது'' என்று கூறியுள்ளார்.
விவாதிக்கப்பட உள்ளன
ஜி 20 கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். கொரோனா கால பாதிப்புகள், கொரோனா லாக்டவுன்களால் பாதிக்கப்பட்ட சர்வதேச நாடுகளின் பொருளாதார மீட்சி, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன என்று கூறப்படுகிறது.
போப் பிரான்சியையும் சந்திக்க உள்ளார்
மாநாடு முடிந்து வாடிகனுக்கு செல்லும் பிரதமர் மோடி, போப் பிரான்சிசை சந்தித்தது பேசுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு 30 நிமிடம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடி போப் பிரான்சிசை சந்தித்து பேச இருப்பது இதுவே முதன்முறையாகும். இதேபோல் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் மோடி சந்தித்து பேச உள்ளது குறிப்பிடதக்கது.