ரஷ்யாவில் பிரதமர் மோடி- பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப் பேச்சுவார்த்தை- ஆப்கான் குறித்து ஆலோசனை!
உஃபா: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவின் உஃபா நகரில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை இன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் தலிபான்களின் கை ஓங்கி வருவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய 5 மத்திய ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி தற்போது ரஷ்யா சென்றுள்ளார். ரஷ்யாவின் உஃபா நகரத்தில் உள்ள விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

உஃபா நகரில் நேற்று நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் அவர் கலந்து கொண்டார். இன்று காலை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை நரேந்திர மோடி, சந்தித்தார்.
இருநாடுகளை சேர்ந்த உயரதிகாரிகள் முன்னிலையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றது. மும்பை தாக்குதல் தீவிரவாதி லக்வியை பாகிஸ்தான் விடுதலை செய்தது, எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் உள்பட இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து நவாஸ் ஷெரிப்புடன் பிரதமர் மோடி விவாதித்தார்.
மேலும் ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ், தலிபான்களின் கை ஓங்கி இருப்பது குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதித்தனர். இந்திய தரப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் சார்க் உச்சி மாநாடு நடந்தது. அதில், இந்தியப் பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்து கொண்டனர். ஆனால், இருதரப்பிலும் பேச்சுவார்த்தை ஏதும் நடைபெறவில்லை.
இந்நிலையில் 8 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் நேருக்கு நேர் சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications