டோக்கியோ வந்துட்டேன்.. மோடி ட்வீட்! ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே நினைவு நிகழ்வில் பங்கேற்கிறார்
டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கடந்த ஜூலை மாதம் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது நினைவு நிகழ்வில் பங்கேற்க அந்நாட்டு தலைநகர் டோக்கியோவுக்கு சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்தவர் ஷின்சோ அபே. தன்னுடைய பதவி காலத்தில் இந்தியாவுக்கு பல முறை பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்துகொள்வதற்காக வருகை தந்தவர்.
இந்தியாவில் புல்லட் ரயில் உட்பட பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து திட்டங்களுக்காக இவரது ஆட்சி காலத்தில் பல கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சுட்டுக்கொலை
உலக தலைவர்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட ஷின்சோ அபே கடந்த ஜூலை மாதம் நரா என்ற இடத்தில் ஜுலை மாதம் 8 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு இருந்தபோது டெட்சுய யமகாமி என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகையே உலுக்கியது.

நினைவு நிகழ்ச்சி
ஷின்சோ அபேவின் உடல் இறுதிச்சடங்கு கடந்த 12 ஆம் தேதி டோக்கியோவில் நடைபெற்றது. இந்த நிலையில் ஜப்பான் நாட்டு அரசு ஷின்சோ அபேவின் நினைவு நிகழ்ச்சியை இன்று பிரம்மாண்டமான முறையில் நடத்துகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

ஜப்பானில் மோடி
இந்த நிலையில் ஷின்சோ அபேவின் நினைவு நிகழ்வில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜப்பான் புறப்பட்டார். இன்று அதிகாலை தலைநகர் டோக்கியோவுக்கு அவர் சென்றடைந்தார். இந்த பயணத்தில் பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்து பேச இருக்கிறார்.

மோடி ட்வீட்
இதுகுறித்து நேற்று ட்விட்டரில் பதிவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, "நான் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் நினைவு நிகழ்வில் பங்கேற்க இரவு டோக்கியோ செல்ல இருக்கிறேன். அந்நாட்டு பிரதமர் கிஷிடா மற்றும் ஷின்சோ அபேவின் மனைவி ஆகியோரிடம் இந்தியர்களின் சார்பாக இரங்கல் தெரிவிக்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார். இன்று அதிகாலை ஜப்பான் சென்றடைந்த அவர் டோக்கியோவில் தரையிறங்கிவிட்டேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications