பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப் காரை குறி வைத்து வந்த மர்ம கார்.. கொலை முயற்சியா?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தாக்கும் முயற்சியாக அவர் காரை குறிவைத்து வந்த காரை ஓட்டி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் முர்ரேயில் உள்ள சுற்றுலா ரிசார்டில் இருந்து தனது குடும்பத்துடன் தலைநகரான இஸ்லாமாபாத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கார் ஒன்று பாதுகாப்பு வாகனங்களை முந்திச் சென்று நவாஸ் ஷெரீப்பின் கார் மீது மோத முயற்சி செய்தது.

ஆனால், உஷாரான பாதுகாப்பு வாகனங்கள் அந்தக் காரை பிரதமரின் கார் பக்கம் செல்ல விடாமல் தடுத்தன. இதனால், அந்தக் கார் பாதுகாப்பு வாகனங்களின் மீது மோதியது.
அதனைத் தொடர்ந்து, அந்தக் காரை மடக்கிப் பிடித்த பாதுகாவலர்கள் அதனை ஓட்டி வந்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த மர்மநபர் ஓட்டி வந்த காரின் எண் போலியானது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறதாம். பிடிபட்ட நபர் தான் பாகிஸ்தான் விமானப்படையில் பணியாற்றி ஓ்ய்வு பெற்றவர் என்றும், குடும்பத்துடன் சென்று கொண்டிருப்பதாகவும் கூறினாராம். இருப்பினும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறதாம்.
லஷ்கர் இ ஜாங்வி என்ற அமைப்பின் தலைவரான மாலிக் இஷாக் என்பவர் கடந்த வாரம், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். இதனால் பழிவாங்கும் நடவடிக்கையில் தீவிரவாதிகள் ஈடுபடலாம் என்ற அச்சம் உள்ளது. இந்த நிலையில் இந்த மர்மக் காரால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications