தென்கொரியா செல்கிறார் போப்: வான்வெளியைக் கடக்க சீனா அனுமதிக்குமா..?
வாடிகன் சிட்டி: ஆசிய கத்தோலிக்க இளைஞர்கள் திருவிழாவில் பங்கேற்க தென்கொரியா செல்லும் போப் ஆண்டவர், சீனாவின் வான் வழியாக கடந்து செல்வார் என்றும், அப்போது சீனாவிற்கு தனது வாழ்த்துச் செய்தியைத் தெரிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
கத்தோலிக்க கிறித்துவர்களின் மதகுரு போப் பிரான்சிஸ். கடந்த 1951ஆம் ஆண்டு சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரபூர்வமாக ஆட்சிக்கு வந்தது முதலே, அந்நாடு போப்புடனான தனது உறவுகளை சீராக பேணாவில்லை. போப்பினுடைய அதிகாரத்தைத் தவிர்த்த சீன அரசு அந்நாட்டில் இருந்த தேவாலயங்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது.

இதனால் கடந்த 1989ஆம் ஆண்டு அப்போதைய போப் ஜான் பால்-II தென் கொரியாவிற்கு சென்றபோது சீனா வழியே பறக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் ரஷ்யா மார்க்கமாக சென்ற அவர் ரஷ்ய அதிபருக்கு சம்பிரதாயப்படி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
சீனர்கள் நல்ஆதரவு...
ஆனால் அவதைத் தொடர்ந்து பதவிக்கு வந்த போப் பெனடிக்ட் XVI சீனாவில் இருந்த 8-12 மில்லியன் வரையிலான கத்தோலிக்கர்களுடன் உறவுகளை மேம்படுத்தும் விதமாகவே செயல்பட்டுவந்தார்.
வாழ்த்து...
தற்போதைய போப் பிரான்சிஸ்சும் இந்த ஆதரவைத் தொடரும் விதமாகவே செயல்பட்டு வருகிறார். போப் பதவிக்கான தனது தேர்விற்கு சில மணி நேரங்களுக்குப்பின் சீனாவில் அதிபர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட ஜி ஜின்பிங்குக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பியதாகவும் அதற்கு சீன அதிபரிடமிருந்து பதில் வந்ததாகவும் பத்திரிகை செய்தி ஒன்றில் அவரே தகவல் வெளியிட்டிருந்தார்.
இளைஞர்கள் திருவிழா...
இந்நிலையில், இம்மாதம் 13ம் தேதி தென் கொரியாவில் நடைபெற உள்ள ஐந்து நாள் ஆசிய கத்தோலிக்க இளைஞர்கள் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக புறப்படுகிறார் போப் பிரான்சிஸ்.
சீனாவிற்கு வாழ்த்து...
பொதுவாக விமானப் பயணம் மேற்கொள்ளும் போது, விமானம் கடந்து செல்லும் நாடுகளின் தலைவர்களுக்கு வாழ்த்துச்செய்திகளை அனுப்புவது போப்பினுடைய நடைமுறை. எனவே, இம்முறை சீனா வழியே பறக்க போப் பிரான்சிஸ்சுக்கு அனுமதி கிட்டும் என்றும், சீன அதிபருக்கு போப் தனது வாழ்த்துகளைத் தெரிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
சீனா குறித்துப் பேச்சு...
மேலும், தென்கொரிய இளைஞர்கள் திருவிழாவில் சீன இளைஞர்களும் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அதேபோல், இத்திருவிழா நிகழ்ச்சிகளின் கடைசி நாளான 18ஆம் தேதியன்று உலக சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக பொது பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றை மேற்கொள்கிறார் போப். அப்போது வடகொரியா மற்றும் சீனா குறித்தும் போப் பிரான்சிஸ் பேசுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications