ஈராக்கில் போப் பிரான்சிஸ்.. வன்முறை, தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு
பாக்தாத்: ஈராக் நாட்டிற்கு சென்றுள்ள போப் பிரான்சிஸ், வன்முறை மற்றும் தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு, தன்னுடைய முதல் சர்வதேச பயணமாக போப் பிரான்சிஸ் (Pope Francis), ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு சென்றுள்ளார்.

கோவிட் மற்றும் பாதுகாப்பு காரணமாக அவர் மேற்கொள்ளும் ஆபத்தான பயணம் இது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இது எனது கடமை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஈராக் பல ஆண்டுகளாகத் துன்பத்துக்கு ஆளாகியிருப்பதால், தாம் அங்கு செல்லக் கடமைப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
போப் பாதுகாப்பு பணியில் சுமார் 10,000 ஈராக்கிய பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கோவிட் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
ஈராக் அதிபர் பர்ஹாம் சாலிஹ் வரவேற்ற பின்னர் உரையாற்றிய போப் பிரான்சிஸ், "நான் ஈராக் வருவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது 'நாகரிகத்தின் தொட்டில்'. இங்கு ஆயுத மோதல்கள் அமைதியாகட்டும். வன்முறை, தீவிரவாதம், பிரிவினை மற்றும் சகிப்பின்மை போன்றவை முடிவுக்கு வரட்டும். ஈராக் பல போர்களின் பேரழிவு விளைவுகளை சந்தித்துள்ளது.
இந்த நிலத்தில் வாழும் கிறிஸ்தவர்கள், இந்த தேசத்தின் வாழ்க்கைக்கு அவர்கள் அளித்த பங்களிப்புகள், ஒரு வளமான பாரம்பரியத்தை உருவாக்குகின்றன. தவிர, தங்களது இந்த பணியை அவர்கள் தொடர்ந்து செயல்படுத்த விரும்புகின்றனர்" என்று அவர் கூறினார்.
போப் பிரான்சிஸ் BioNTech/Pfizer vaccine தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டார். அவர் உடன் செல்லும் அதிகாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால், இவர் செல்லும் இடங்களில் பெருமளவில் கூட்டம் கூடும் என்பதால், வைரஸ் பெரியளவில் ஈராக்கில் பரவ வாய்ப்பிருப்பதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications