வாடிகனில் திரும்பும் இயல்புநிலை.. முதன்முறையாக முகக்கவசம் அணிந்து போப் ஆண்டவர் கூட்டுப் பிரார்த்தனை!
வாடிகன்: வாடிகன் நகரில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் முதல் முறையாக முகக்கவசம் அணிந்து போப் ஆண்டவர் பிரான்சிஸ் பங்கேற்றார்.
கொரோனா தொற்றால் கடந்த ஆறு மாதங்களாக உலகமே முடங்கியுள்ளது. வழிபாட்டு தளங்கள் எல்லாம் மூடப்பட்டதால் கூட்டுப் பிரார்த்தனை எதுவும் நடைபெறவில்லை. இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் வழிபாடு செய்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில் உலகம் முழுவதும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வழிபாட்டு தளங்கள் எல்லாம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக வாடிகன் நகரிலும் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் அங்கு மீண்டும் கூட்டுப் பிரார்த்தனைகள் தொடங்கியுள்ளன.
வாடிகன் சிட்டியில் சான் டமாசோ அரங்கில் வாராந்திர கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்திருந்த போப் ஆண்டவர் பிரான்சிஸ் முதல் முறையாக முகக்கவசம் அணிந்து வந்திருந்தார். மேலும் கிருமிநாசினி கொண்டு கையை சுத்தம் செய்துவிட்டு பிரார்த்தனையில் அவர் கலந்து கொண்டார்.
கொரோனா வைரஸ் மரபணு மாற்றம்...தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கு தடையாக...இருக்கிறதா?
இந்த கூட்டுப்பிரார்த்தனையில் 500 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. மீதமுள்ள இருக்கைகள் எல்லாம் காலியாக இருக்கும்படி பார்த்துக்கொண்டனர்.
பிரார்த்தனையின் போது மக்களிடம் உரையாற்றிய போப் ஆண்டவர் பிரான்சிஸ், "துரதிர்ஷ்டவசமாக பாகுபாடான நலன்கள் தோன்றுவதை நாம் காண்கிறோம். சிலர் இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டுள்ளனர். பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முயல்கிறார்கள். அது முற்றிலும் தவறானது. தடுப்பூசி உருவாக்குபவர்கள் அதை வெறும் லாபம் ஈட்டும் முயற்சியாக பார்க்கக்கூடாது" என்று தெரிவித்தார்.