பால், தயிர் கூட கிடைக்கலையே... கத்தாரில் தவிக்கும் தமிழர்கள் - லைவ் ரிப்போர்ட்
பால், தயிர் கூட கிடைக்காமல் தவித்து வருவதாக கத்தாரில் வசிக்கும் தமிழர்கள் கூறியுள்ளனர்.
தோஹா: கத்தார் மீது சவுதி உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள தடையால் அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பால், தயிர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், குழந்தைகளுக்கு பாலின்றி தவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு உதவுவதாக குற்றம்சாட்டி சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் கத்தார் நாட்டுடனான நல்லுறவை துண்டித்துக் கொள்வதாக தெரிவத்தன. மேலும் ராஜாங்க ரீதியிலான உறவையும் துண்டித்துக் கொள்வதோடு, கடல், வான் மற்றும் தரை வழிப் போக்குவரத்துக்கும் திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 5ம் தேதி வெளியான திடீர் அறிவிப்பு காரணமாக அந்த நாட்டு மக்களும், வெளிநாடுகளில் இருந்து பணி மற்றும் கல்வி நிமித்தமாக கத்தார் சென்றுள்ள மக்களும் பதற்றம் அடைந்துள்ளனர். இதனிடையே கல்ப் நாடுகள் கத்தாருடனான அனைத்து இணைப்புச் சாலைகளையும் மூடியுள்ளன. மேலும் கல்ப் நாடுகளில் உள்ள கத்தார் நாட்டு மக்கள் 14 நாட்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தட்டுப்பாடு
சவுதி அரேபியா எல்லையை ஒட்டியுள்ள கத்தார் நாட்டின் 80 சதவீத உணவுத் தேவையை அண்டை நாடுகளான சவுதி மற்றும கல்ஃப் அரபு நாடுகளே மூலதனமாக உள்ளன. இந்நிலையில் எல்லை மூடப்படுவதால் உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
பால், தயிர் கூட கிடைக்கலையே
தமிழகத்தில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரி ஒருவர் திருமணம் முடித்து கத்தாரில் வசித்து வருகிறார். நமது ஒன்இந்தியா தமிழ் இணைய தளம் சார்பாக அவரை தொடர்பு கொண்டோம். திடீரென்று ஒரு வாரத்தில் நிலைமை இப்படி மோசாமாகும் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.
பதற்றநிலை
இங்கு வசிக்கும் தமிழர்களுக்கு மட்டுமல்லாது வேறு மாநிலத்தைச் சேர்ந்த இந்தியர்களும் இங்கே ஒருவித பதற்றத்துடனேயே காணப்படுகின்றனர். குழந்தைகளுக்கு பால், தயிர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
எப்போது சரியாகுமோ?
ரம்ஜான் மாதத்தில் இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று கனவிலும் நினைக்கவில்லை. நேற்று வரை நம் சொந்த ஊரில் சொந்த வீட்டில் வசிப்பது போன்ற ஒரு உணர்வு இருந்தது. இன்றைய சூழ்நிலையில்தான் நாடு விட்டு நாடு வந்துள்ளதை உணர்கிறோம் என்று சோகத்துடன் கூறியுள்ளனர்.