அமெரிக்கா ஷட்-டவுன்: நின்று போன திருமணங்கள்... தவிக்கும் குழந்தைகள்
நியூயார்க்: அமெரிக்க அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள் கதவடைப்பு செய்யப்பட்டுள்ளன. அதிபர் ஒபாமாவின் பெடரல் அரசு அலுவலங்கள், சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் பல லட்சம் ஊழியர்கள் பணியிழந்துள்ளனர். அரசு வெப்சைட்கள் ‘இருட்டு' மயமானது. யெல்லோஸ்டோன், அலாக்ரடஸ் போன்ற தேசிய பொழுதுபோக்கு பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் போன்றவையும் இழுத்து மூடப்பட்டன.
அரசு அருங்காட்சியகங்கள், நினைவிடங்கள் மூடப்பட்டுள்ளதால் அங்கு திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்த நூற்றுக்கணக்கானோர் தங்களின் திருமணத்தை ஒத்திவைத்துள்ளனராம்.
அமெரிக்காவில் அரசு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டாய விடுமுறையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.

8 லட்சம் பேர் தவிப்பு
அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் 8 லட்சம் பேர் சம்பளமின்றி வீட்டில் முடங்கியுள்ளனர். வேலையிழந்தவர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருமணங்கள் நிறுத்தம்
அரசு அருங்காட்சியகங்கள், நினைவிடங்கள் உள்ளிட்டவைகளை அரசு மூடியுள்ளது. இதனால் அங்கு நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
பெரும்பள்ளத்தாக்கு (கிராண்ட் கன்யான்), வாஷிங்டனில் உள்ள நினைவுச் சின்னங்கள் அருகே நவம்பர் முதல் வாரத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறவிருந்தன. வேறு தேதி, இடங்களில் திருமணத்தை நடத்த வேண்டிய சூழல் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

டிவிகளில் காமெடி ஷோ
இதனைவைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காமெடி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிவருகின்றன. திருமணத்தை எங்கு நடத்தலாம் என்று ஃப்ரியாக அட்வைஸ் வேறு செய்கின்றனர்.

போர்வீரர்களின் நினைவிடங்கள்
பிரிட்டனில் உள்ள அமெரிக்க போர் வீரர்களின் நினைவிடங்கள் மூடப்பட்டுள்ளன. கேம்பிரிட்ஜ் மற்றும் தென் கிழக்கு பிரிட்டனில் உள்ள வோகிங் ஆகிய 2 இடங்களில் போர்வீரர் கல்லறைகள் அமெரிக்காவின் போர் நினைவிட ஆணையத்தால் பராமரிக்கப்படுகின்றன. நிதிப்பற்றாக்குறை காரணமாக இரு கல்லறைத் தோட்டங்களும் மூடப்பட்டுள்ளன.

செவ்விந்தியர்கள் தவிப்பு
அமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத் தொகையும் நிறுத்தப்பட்டுவிட்டதாம். அதோடு குழந்தை வளர்ப்பு நிதி, நுண்ணூட்டச்சத்து திட்டங்கள், நிதியுதவித் திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டதை அடுத்து செவ்விந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏழை குழந்தைகள்
பாலர்பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த உணவுத் திட்டம், மருத்துவத் திட்டம் ஆகியவையும் நிறுத்தப்பட்டுள்ளதால், நான்கு மாகாணங்களைச் சேர்ந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏழைக்குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலா பாதிப்பு
சுற்றுலாவும் இதர பொது நிகழ்ச்சிகளும் கூட பாதிக்கப்பட்டுள்ளன. அரசு வங்கிகளில் கடன் பெற்றவர்கள், தங்களுக்கு வரவேண்டிய காசோலைகளைப் பணமாக்க முயற்சித்தால், அவை கடன்களுக்காக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால், கால்நடைகளை விற்றதற்கான பணத்தைப் பெற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

ஊதியம் கிடைக்க வாய்ப்பு?
அரசு ஊழியர்களுக்கு ஊதியமற்ற கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விடுமுறைக்கால நாள்களுக்கு ஊதியம் வழங்க அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் இது தொடர்பான மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில் முன்தேதியிட்டு கட்டாய விடுமுறை நாள்களுக்கு ஊதியம் வழங்கப்பட வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications