ஈரான் வெடி விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு.. கண்டெய்னரில் ரசாயனத்தால் பயங்கரம்? விசாரணை தீவிரம்!
டெஹ்ரான்: ஈரான் துறைமுக நகரான பாந்தர் அப்பாஸில் நேற்று நிகழ்ந்த கோர வெடி விபத்தில் 14 பேர் பலி ஆகியுள்ளனர். வெடி விபத்து மற்றும் தீ விபத்தில் 750க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாந்தர் அப்பாஸ் நகரின் ஷாஹித் ராஜேய் துறைமுகத்தில் கண்டெய்னர் நிறுத்தி வைத்திருந்த பகுதியில் பயங்கர சத்தத்துடன் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. கண்டெய்னர் யார்டில் கெமிக்கல் பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததே வெடி விபத்திற்கு காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன்.

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள பந்தர் அப்பாஸ் நகரம் ஈரானின் முக்கிய வர்த்தக மையம். எண்ணெய் ஏற்றுமதியில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. எண்ணெய் உள்பட பல்வேறு பொருட்கள் இங்கிருந்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதேபோல, ஈரானுக்கு இந்த வழியாக இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்தச் சூழலில் பாந்தர் அப்பாஸில் உள்ள துறைமுகத்தில் கன்டெய்னர் இருந்த பொருள் நேற்று வெடித்தது. இதனால், அங்கிருந்த கட்டடம் மற்றும் வாகனங்கள் கடுமையாகச் சேதமடைந்தன. மேலும், தீ விபத்து ஏற்பட்டு அந்த பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இந்த பயங்கர் வெடி விபத்தின் அதிர்வலை பல கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பாலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விபத்தில் தற்போது வரை 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் 750க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், தீயை அணைக்கவும் சிக்கியவர்களை மீட்கவும் தீயணைப்பு துறையினர் முழுவீச்சில் ஈடுபட்டனர்.
காயமடைந்தவர்கள் பந்தர் அப்பாஸ் மருத்துவ மையங்களுக்கு மாற்றப்படுவதாக பிராந்திய ஆளுநர் முகமது அஷோரி தாசியானி தெரிவித்துள்ளார். துறைமுகம் மூடப்பட்டு கடல்சார் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஈரான் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வெடிப்புக்கான காரணம், எந்தப் பொருள் வெடித்தது என்பது குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடிப்புக்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த ரசாயனங்கள் காரணமாக இருக்கலாம் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன்.
ஈரான் அமெரிக்கா இடையே அணு ஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தை ஓமனில் நடக்கும் நேரத்தில், இந்த வெடி விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications