ஓமனில் கேரளாவை சேர்ந்த கர்ப்பிணி நர்ஸ் குத்திக் கொலை: 12 இடங்களில் கத்திக்குத்து
ஓமன்: ஓமனில் கர்ப்பாக இருந்த கேரளாவை சேர்ந்த நர்ஸ் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர் சிக்கு ராபர்ட். அவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சிக்குவும் ஓமனின் தோஃபார் மாகாணத்தில் இருக்கும் சலாலா நகரில் செயல்படும் பத்ர் அல் சாமா மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்தார். அவரது கணவர் லின்சன் தாமஸும் அதே மருத்துவமனையில் நர்ஸாக உள்ளார்.
இந்நிலையில் சிக்கு கர்ப்பாமானார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அவர் பணிக்கு செல்ல வேண்டியது. ஆனால் அவர் பணிக்கு வராததால் மருத்துவமனையில் பணியில் இருந்த தாமஸ் சிக்குவை தேடி வீட்டிற்கு வந்தார்.
வீட்டில் அவர் பிணமாகக் கிடந்ததை பார்த்து தாமஸ் அதிர்ச்சி அடைந்தார். சிக்குவின் உடலில் 12 இடங்களில் கத்திக் குத்து இருந்தது. இது குறித்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிக்குவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.