கமீலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த டயானா? இளவரசர் ஹாரியின் சுயசரிதையில் திடுக்!
லண்டன்: இளவரசர் சார்லசின் காதலியாக கமிலா பார்க்கர் இருந்த போது அவருக்கு டயானா கொலை மிரட்டல் விடுத்ததாக, டயனாவின் இளைய மகன் இளவரசர் ஹாரியின் சுய சரிதையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி. இவர் தனது 30-வது பிறந்த நாளை வரும் 15-ந் தேதி கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது சுயசரிதையை பத்திரிகையாளரும், இங்கிலாந்து அரச வம்சத்தை சேர்ந்தவர்களின் சுயசரிதையை எழுதி பிரபலமானவருமான பென்னி ஜூனர் எழுதி உள்ளார். இந்தப் புத்தகத்தின் பெயர் ‘இளவரசர் ஹாரி: சகோதரர், வீரர், மகன்' என்பதாகும். இந்தப் புத்தகத்தில் டயானா பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
பொஸசிவ்னெஸ்
டயானா தனது பிள்ளைகள் வில்லியம், ஹாரி மீது கொண்ட அன்பு, ஆட்டிப்படைக்கிற அளவில், தனக்கே சொந்தமானவர்கள் என்று கருதுகிற வகையில் அமைந்திருந்தது. ‘உங்களை அதிகமாக நேசிப்பது யார்?' என்று அடிக்கடி பிள்ளைகளை நோக்கி அவர் கேட்பாராம்.
பாதிக்கப்பட்ட பணிப்பெண்கள்
வில்லியம், ஹாரி ஆகியோரை வளர்ப்பதற்கு பல்வேறு பணிப்பெண்கள் அமர்த்தப்பட்டிருந்த நிலையில், அவர்கள் குழந்தைகளோடு நெருங்கிப்பழகி, உணர்வுப்பூர்வமாக ஒன்றி விடுவார்களேயானால், அவர்களை டயானா வேலையை விட்டு நீக்கி விடுவார். இப்படி பலரை நீக்கி இருக்கிறார்.
தாயாக நடந்து கொண்டதில்லை
உண்மையான பிரச்சினை என்னவென்றால், டயானாவுக்கு அவரது அம்மா, தாயாக ஒரு போதும் நடந்துகொண்டதில்லையாம். எனவேதான் டயானாவுக்கும், அவரது பிள்ளைகளுக்கு ஒரு உண்மையான தாயாக நடந்துகொள்ளத் தெரியவில்லை. வில்லியம், ஹாரிக்கு அவர் ஒரு மூத்த சகோதரிபோலத்தான் நடந்துகொண்டார்.
குழந்தையைப் போல
சில சமயம், அவர்களை வளர்த்து வந்த பணிப்பெண்கள், வில்லியம், ஹாரியுடன் டயானாவையும் சேர்த்து 3 குழந்தைகளை பராமரிக்க வேண்டி இருப்பதாகவே கருதினர்.
கொலை மிரட்டல்
இளவரசர் சார்லசின் தற்போதய மனைவியான கமிலா பார்க்கருக்கு டயானா கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். கமிலா வீட்டில் தனிமையில் இருந்தபோது, நள்ளிரவு நேரத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘‘நான் உன்னை கொலை செய்ய ஒருவரை அனுப்பி உள்ளேன். அவர்கள் உன் தோட்டத்திற்கு வெளியே நிற்கிறார்கள் பார். ஜன்னலுக்கு வெளியே பார். நீ அவர்களைப் பார்க்கிறாயா?'' என்றெல்லாம் கேட்டு மிரட்டி இருக்கிறார். ஹாரியின் சுயசரிதை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த தகவல்கள் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சார்லஸ் – டயனா காதல்
பள்ளி ஆசிரியையாக இருந்த டயானாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் சார்லஸ். திருமணத்திற்குப் பின்னர் கமீலா உடன் சார்லஸ்க்கு தொடர்பு இருப்பது தெரிந்து உடைந்து போனார். இதனால் சில நேரங்களில் தற்கொலைக்குக் கூட முயன்றாராம். இந்த தற்கொலை முயற்சியினால், எதை சாப்பிட்டாலும் வாந்தி எடுத்து விடுகிற புலீமியா என்ற வியாதி கூட இருந்துள்ளதாம்.
விவாகரத்தும் மரணமும்
சில வருடங்களிலேயே கமீலா உடன் தனக்கு இருந்த தொடர்பை சார்லஸ் பகிரங்கமாக ஒத்துக்கொண்டார். விரிசல் அதிகமாகவே விவாகரத்துதான் ஒரே வழி என்று தீர்மானிக்கப்பட்டது., 1981-ஜூலை 29ல் உலகமே கண்டு வியந்த திருமணம் சார்லஸ் டயானா திருமணம்தான். 1996 ஆகஸ்ட் 28ல் சார்லஸ் டயானா தம்பதியினர் விவாகாரத்து செய்து கொண்டனர். 1997-ல் ஆகஸ்ட் 31-ல், பாரிஸில் நடந்த ஒரு கார் விபத்தில் டயானாவும் அவர் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்த டோடி பயதும் உயிரிழந்து விட்டனர். இத்தனை ஆண்டுகாலத்திற்குப் பின்னர் இளவரசர் ஹாரி தனது தாயார் டயானாவைப் பற்றியும், கமீலா பார்க்கர் பற்றியும் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.