அதானிக்கு வந்த சோதனை.. விமான நிலையத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராட்டம்
நைரோபி: கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள ஜோமோ சர்வதேச விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு ஒப்பந்தம் விட முடிவெடுக்கப்பட்டிருந்தது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
விமான நிலையங்களை பராமரிப்புக்காக குத்தகை விடும் வழக்கம் உலகம் முழுவதும் இருக்கிறது. இந்தியாவில் பல விமான நிலையங்கள் தற்போது தனியார் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. குறிப்பாக அதானி நிறுவனம் பெரும்பான்மையான விமான நிலைய பராமரிப்பை கையில் வைத்திருக்கிறது. இதேபோல வெளிநாடுகளிலும், விமான நிலையங்களை அதானி நிறுவனம் குத்தகைக்கு எடுத்து வருகிறது. இதில் கென்யாவில் உள்ள ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையம் ஒன்று.

இந்த விமான நிலையத்தை குத்தகைக்கு எடுத்துள்ள அதானி நிறுவனம், புதிய ஓடுபாதை, புதிய முனையத்தை கட்டி, புதுப்பிக்க இருக்கிறது. ஒப்பந்தம் மூலம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு அதானி நிறுவனம் இதனை பராமரிக்கும். இப்படியான ஒப்பந்தத்திற்கு ஆரம்பம் முதலே கடுமையான எதிர்ப்பு இருந்தது. ஒப்பந்தம் ரத்து செய்யப்படாவிட்டால், வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்று விமான நிலைய ஊழியர்கள் எச்சரித்திருந்தனர்.
எச்சரிக்கையை தொடர்ந்து அவர்கள், இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கென்யா விமான நிலைய தொழிலாளர்கள் சங்கம் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறது. போராட்டத்தில் பங்கேற்றுள்ள தொழிலாளர்கள் இது குறித்து கூறுகையில், "தனியார் நிறுவனத்திற்கு விமான நிலையம் குத்தகைக்கு விடப்படுவதன் மூலம், எங்களின் தொழிற்சங்க உரிமைகள் பறிபோகும். மட்டுமல்லாது அதிரடியான ஆட்குறைப்பு நடத்தப்படும். எனவேதான் நாங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.
போராட்டம் காரணமாக நைரோபிக்கு வரும் விமானங்கள் சில திருப்பிவிடப்பட்டிருக்கின்றன. அதேபோல, இங்கிருந்து புறப்படும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. சில தாமதமாக புறப்பட்டு சென்றிருக்கின்றன.
விமான நிலையம் குத்தகைக்கு விடப்படுவது, அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கென்யா மனித உரிமைகள் ஆணையம் நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வரும் வரை, விமான நிலைய ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை, கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி பராமரித்து வருகிறது. அதானி கைக்கு இந்த விமான நிலையம் செல்வதற்கு அம்மாநில அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஆனாலும், எதிர்ப்பை மீறி அதானி வசம் விமான நிலையம் ஒப்படைக்கப்பட்டது. இது நடந்து கொஞ்ச நாட்களிலேயே பயனர் மேம்பாட்டுக் கட்டணம் கடுமையாக உத்தரப்பட்டது. இதன் மூலம் பயணிகளின் கட்டணமும் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications