ட்விஸ்ட்! நீங்கள் அதிகாரத்தை பிடியுங்கள்.. உக்ரைன் ராணுவத்திற்கு புதின் திடீர் அழைப்பு! அடுத்து என்ன
மாஸ்கோ: உக்ரைன் நாட்டில் 2ஆவது நாளாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் ராணுவத்திற்கு புதின் விடுத்துள்ள அழைப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் எல்லையில் கடந்த சில வாரங்களாகவே பதற்றமான சூழல் தொடர்ந்து வந்தது. இந்தச் சூழலில் நேற்றைய தினம் முழு வீச்சில் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க அதிபர் புதின் ரஷ்ய ராணுவத்திற்கு உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போரைத் தொடங்கியது. முதலில் வான்வழித் தாக்குதலைத் தொடங்கிய ரஷ்ய ராணுவம், அதன் பின்னர் பீரங்கி உள்ளிட்டவை பயன்படுத்தித் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

உக்ரைன் போர்
இதற்கு உலக நாடுகள் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, பிரிட்டன், அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளை அறிவிக்கத் தொடங்கி உள்ளன. இருப்பினும், இதற்கெல்லாம் ரஷ்யா அஞ்சுவதாகத் தெரியவில்லை. ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் இதில் தலையிடும் நாடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிபர் புதின்
அங்கு 2ஆவது நாளாகப் போர் தொடரும் நிலையில், உக்ரைன் ராணுவத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுமாறு அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக ரஷ்யத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய புதின், "உக்ரைனின் ராணுவ அதிகாரிகளிடம் நான் மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறேன்: நாஜிக்கள் மற்றும் உக்ரைன் அடிப்படை வாதிகள் உங்கள் குழந்தைகளை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தத் தயவு செய்து அனுமதிக்காதீர்கள்.

உக்ரைன் ராணுவத்திற்கு அழைப்பு
உக்ரைன் ராணுவத்திற்கு நான் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன். நாட்டின் ஆட்சி அதிகாரத்தை உங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டை எட்டுவது எளிது. உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் ரஷ்ய வீரர்கள் மிகவும் தைரியமாகவும், துணிச்சலாகவும் செயல்பட்டு வருகின்றனர்" என்று ரஷ்ய அதிபர் புதின் வெளிப்படையாகவே உக்ரைன் ராணுவத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தலைநகர் கீவ்
போர் காரணமாக உக்ரைன் நாட்டில் கடந்த 2 நாட்களாகவே பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்குள்ள ஒபோலோன்ஸ்கி என்ற பகுதியில் மக்கள் வாழும் குடியிருப்புகளுக்கு அருகே சண்டை நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், உக்ரைன் தலைநகர் கீவ் நகரைக் கைப்பற்றினால் ஒட்டுமொத்த நாட்டையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததைப் போல என்பதால் ரஷ்ய ராணுவம் கீவ் நகரை நோக்கி தீவிரமாக முன்னேறி வருகிறது.












Click it and Unblock the Notifications