டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்த புதின்! காசாவை போல.. உக்ரைன் போருக்கும் முடிவு நெருங்குகிறதா!
மாஸ்கோ: அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் ஏழரை பொருத்தம் என்பது அனைவரும் அறிந்ததுதான். இருந்தும் டிரம்புக்கு புதின் வாழ்த்துகளை பகிர்ந்திருக்கிறார்.
இந்த வாழ்த்து செய்தி, உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான மெசேஜாக கூட இருக்கலாம் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இஸ்ரேல்-பாலஸ்தீன போரில் ரொம்பவும் டேமேஜான ஒரு பெயர் அமெரிக்காதான். போரில் 46,000க்கும் அதிமான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். போருக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இந்த போருக்கு இஸ்ரேலை குற்றம் சொன்னதைவிட அமெரிக்காவைதான் அதிகமானோர் குற்றம் சாட்டினர். ஏனெனில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை சப்ளை செய்ததே அமெரிக்காதான். இப்படி இருக்கையில் அமெரிக்காவின் மீதான விமர்சனம் அதன் தேர்தலிலும் எதிரொலித்தது.
2025ம் ஆண்டிற்குள் இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று பைடன் கூறியிருந்தார். அதற்கேற்ப சில நடவடிக்கைகளையும் அவர் எடுத்திருந்தார். தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் பேசி வந்தார். ஆனால் பெரிய அளவுக்கு போர் நிறுத்தம் குறித்த முடிவுகள் எட்டப்படவில்லை. ஒரு கட்டத்தில் இந்த போருக்கு அமெரிக்கா எதிராக இருக்கிறது என்று பைடன் பொதுவெளியில் அறிவித்துவிட்டார். இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ள வேண்டியது அவசியம்தான். ஆனால், அதற்காக கட்டுக்கடங்காத போரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பைடன் அதிருப்தி தெரிவித்தார்.
இதன் பின்னர்தான் கொஞ்சம் கொஞ்சமாக நெதன்யாகுவின் பேச்சிலும், செயலிலும் வீரியம் குறைய தொடங்கியது. ஆனால் முழுமையாக இல்லை. இதை முழுமைப்படுத்தியது டிரம்ப்தான். மொத்த அரசாங்கத்தையும் கையில் வைத்திருக்கும் பைடனால் செய்ய முடியாததை நான் செய்து காட்டுகிறேன் என்று கூறி தனது அஸ்திரத்தை கையில் எடுத்தார் டிரம்ப். ஸ்டீவ் விட்காஃப் தான் அந்த அஸ்திரம்.
டிரம்புக்கும் இவருக்கும் நீண்ட ஆண்டுகளாக பழக்கம் இருக்கிறது. ஸ்டீவ் விட்காஃப் அடிப்படையில் ஓர் நில வியாபாரி. இவருக்கு பேரம் பேசுவது கை வந்த கலை. அதேநேரம், வெளிநாட்டு உறவுகள் குறித்தும் அனுபவம் கொண்டிருந்தார். இந்த அனுபவத்தின் அடிப்படையில்தான் நெதன்யாகுவை புடி புடி என இறுக்கி பிடித்து டிரம்ப் பதவியேற்பதற்கு முன் போரை நிறுத்தம் செய்திருக்கிறார்.
இப்போது விஷயம் என்னவெனில், டிரம்ப் பதவியேற்புக்கு புதின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வெறுமென வாழ்த்து மட்டுமல்லாது,"அமெரிக்காவுடனான அமைதியான உறவுக்கு ரஷ்யா தயாராக இருக்கிறது" என்றும் கூறியிருக்கிறார். இது என்ன கணக்கு என்று பல்வேறுதரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இஸ்ரேல்-பாலஸ்தீன போரை போல உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்தும் முயற்சியில் டிரம்ப் இறங்கியிருக்கிறாரா? என்று கேள்வி எழுந்திருக்கிறது. இந்த போருக்கு நேட்டோதான் காரணம்.
உக்ரைனை நேட்டோவில் இணைக்க அமெரிக்கா விரும்பியது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பை தெரிவித்தது. எதிர்ப்பை பொருட்படுத்தாமல் உக்ரைன் நேட்டோவில் இணைய தீவிரம் காட்டியது. விளைவு ரஷ்யா போர்.
ரஷ்ய போர் குறித்து சமீபத்தில் பேசிய டிரம்ப், ரஷ்யர்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்ள முடிகிறது. நேட்டோ வந்துவிட்டார் அவர்கள் வீட்டு வாசலில் ராணுவம் நிற்க வைக்கப்படும். அவர்களின் உணர்வுகளை நான் புரிந்துக்கொள்கிறேன் என்று பேசியிருந்தார்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, டிரம்ப் பதவியேற்ற உடன் போரை நிறுத்த சொல்லிவிட்டு, பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக புதினின் வாழ்த்து செய்தி அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications