"என் வாழ்க்கையையே அழித்தது அவர்தான்.." சொந்த தந்தையை திட்டும் புதினின் சீக்ரெட் மகள்? என்ன காரணம்
மாஸ்கோ: ரஷ்யாவின் அதிபராகக் கடந்த 2012 முதல் இருப்பவர் புதின். உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றின் தலைவராக புதின் இருந்தாலும் கூட இப்போது வரை அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசிய தகவல்கள் இல்லை. இதற்கிடையே புதினின் சீக்ரெட் மகளாக அறியப்படும் 22 வயதாகும் எலிசவேதா பதிவிட்டுள்ள போஸ்ட் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
புதின் கடந்த 2000ம் ஆண்டு முதலே ரஷ்யாவை முழுமையாக கண்ட்ரோலில் வைத்துள்ளார். 2000 முதல் 8 ஆண்டுகள் அதிபராக இருந்த அவர், பிறகு 4 ஆண்டுகள் ரஷ்யப் பிரதமராக இருந்தார். அதன் பிறகு 2012 முதல் மீண்டும் அதிபராகப் பதவியேற்று இருந்து வருகிறார். 25 ஆண்டுகள் சர்வதேச அளவில் பவர்புல்லான தலைவராக இருந்தாலும் கூட அவரது தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம் குறித்த தகவல்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

புதின் மகள்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் சீக்ரெட் மகளாக அறியப்படுபவர் எலிசவேதா கிரிவோனோகிக்.. இதற்கிடையே இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு போஸ்ட் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த போஸ்ட்டில் அவர் தன்னை அழித்துவிட்டதாகவும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காவு வாங்குவதாகவும் தனது தந்தையை புதினை மறைமுகமாகக் குறிப்பிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
22 வயதாகும் எலிசவேதா தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வசித்து வருகிறார். அங்குக் கலைத் துறை சார்ந்து சில வேலைகளைச் செய்து வருகிறார். இதற்கிடையே அவர் தனது டெலிகிராம் சேனலில் மிகவும் உணர்வுப்பூர்வமான ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளார். 'தி நியூயார்க் போஸ்ட்' செய்தி நிறுவனம் இது தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துள்ளது. இந்த போஸ்ட் எலிசவேதாவுக்கும் அவரது தந்தைக்குமான உறவு குறித்த சர்ச்சைகளை மீண்டும் கிளப்பியுள்ளது.
வாழ்க்கையை அழித்தவர்
இது தொடர்பாக அவர், "மீண்டும் என் முகத்தை உலகுக்குக் காட்ட முடிவதே ஒரு விடுதலை தான். நான் யார் என்பதையும், என் வாழ்க்கையை யார் அழித்தார் என்பதையும் இது எனக்கு நினைவுபடுத்துகிறது" என்று பதிவிட்டுள்ளார். மேலும், பல மில்லியன் பேரை அழித்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவில் அவர் புதினின் பெயர் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும் அவர் புதினையே குறிப்பிட்டுள்ளதாகப் பலரும் குறிப்பிடுகிறார்கள்.
யார் இந்த எலிசவேதா
எலிசவேதா கிரிவோனோகிக் 2003ஆம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பிறந்தார் என்றும் அவரது தாய் ஸ்வெட்லானா கிரிவோனோகி என்ற தொழிலதிபர் என்றும் கூறப்படுகிறது. 2020ம் ஆண்டில் தான் அதிபர் புதினின் மகள் தான் எலிசவேதா என்ற செய்தி வெளியாகிப் பரபரப்பை கிளப்பியது. அப்போதே எலிசவேதாவுக்கும் புதினுக்கும் இருக்கும் உருவ ஒற்றுமை குறித்த செய்திகள் வெளியானது. மேலும், அவரது முழு பெயரில் உள்ள "விளாடிமிரோவ்னா" என்பது விளாடிமிரின் மகள் என்று அர்த்தமாகும்.
எலிசவேதா பிறப்புச் சான்றிதழில் தந்தை பெயர் இல்லாத நிலையில், இது குறித்த ஊகங்கள் அதிகரித்துள்ளன. இவை எல்லாம் அப்போதே விவாதத்தைக் கிளப்பியது. அதேநேரம் தொடக்கம் முதலே இவை அனைத்தும் வதந்திகளே என்று ரஷ்ய அதிபர் மாளிகை தொடர்ந்து கூறி வந்தது.
பின்னணி
இதற்கு முன்பு லூயிசா ரோசோவா என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்த எலிசவேதா தனது தனிப்பட்ட விமானங்கள், ஆடம்பரமான விருந்துகளின் போட்டோக்களை அடிக்கடிப் பகிர்ந்து வந்தார். ஆனால், 2022ல் உக்ரைன் போர் காலகட்டத்தில் எலிசவேதா மீது மக்கள் கோபம் காட்டத் தொடங்கினர். புதினின் நடவடிக்கைகளுக்காக எலிசவேதா மீது கோபம் கொண்டனர். இதன் காரணமாக அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென முடக்கப்பட்டது.
முன்பு 2021ல் எலிசவேதா பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது புதின் தான் தந்தை என்று பரவும் தகவல்களை உறுதி செய்யவோ மறுக்கவோ இல்லை. அதேநேரம் புதினுக்கும் தனக்கும் இருக்கும் உருவ ஒற்றுமைகளை அவர் ஒப்புக்கொண்டார்.












Click it and Unblock the Notifications