நாம எல்லாம் நைட்லயே தூக்கம் வராம மொபைல் பார்க்குறோம்.. ஆனா, இந்தப் பொண்ணு கதையே வேற!
கிளெயின் லெவின் எனும் வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ள இளம்பெண் தொடர்ந்து இரண்டு மாதங்களாக தூங்கி வருகிறார்.
பகோடா: கொலம்பியாவில் கிளெயின் லெவின் என்ற வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் 17 வயது இளம்பெண் ஒருவர்.
சமீபகாலமாக மனிதர்கள் தூங்கும் நேரமே மாறி வருகிறது. இரவில் எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும், பகலில் வேலை செய்ய வேண்டும் என்பது தான் நமது உடலமைப்பிற்கு சரியான ஒன்று. ஆனால், அதனை மாற்றி வர வர இரவு நாம் தூங்கும் நேரம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

இதற்கு தொலைக்காட்சி, செல்போன் என தொழில்நுட்ப வளர்ச்சியும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. முன்பெல்லாம் புத்தகம் படித்தால் தான் தூக்கம் வரும் என்பது போல், இப்போதெல்லாம் பலருக்கு செல்போன் பார்த்தால் தான் தூக்கம் வருகிறது.
இதனால் உடலின் மெட்டபலிசமே மாறுகிறது. இதுவே பல்வேறு நோய்களுக்கு மூலக்காரணம் ஆகி விடுகிறது. ஆராய்ச்சியாளர்கள் இது பற்றி எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், நாம் மாறுவதாக இல்லை. கேட்டால் தூக்கம் வரவில்லை என்பது தான் பலரது புகாராக இருக்கிறது.
நமக்கெல்லாம் இப்படி ஒரு வினோதமான பிரச்சினை இருக்கிறதென்றால், இதில் இருந்து மாறுபட்டு வேறு விதமான பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார் கொலம்பியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர்.
கொலம்பியாவின் அகாசியஸ் நகரைச் சேர்ந்தவர் 17 வயது இளம் பெண் ஷாரிக் தோஹார். இவருக்கு கிளெயின் லெவின் என்ற விநோத நோய் வந்துள்ளது. இவரது பெரும் பிரச்சினையே எப்போதும் தூங்கிக் கொண்டே இருப்பது தான்.
கிளெயின் லெவின் நோய் உள்ளவர்கள் தூங்க ஆரம்பித்தால் பல நாட்கள் தூக்கத்திலேயே இருப்பார்கள். கண் விழித்து அவர்கள் வேலை செய்யும் நேரம் மிகவும் குறைவே. சில மணி நேரங்கள் மட்டுமே கண் விழித்திருக்கும் அவர்கள், திரும்பவும் சோர்வாகி தூங்கச் சென்று விடுவார்கள்.
மிகவும் அரிய நோயான இந்த நோய் தாக்கியவர்கள் உலகத்திலேயே 40 பேர் தான் உள்ளனர் என்கிறது மருத்துவத்துறை. அவர்களில் ஷாரிக் தோஹரும் ஒருவர். எப்போதும் தூக்கத்திலேயே இருப்பதால் ஷாரிக் தோஹருக்கும் பசி, தாகம் எதுவுமே தெரியாதாம். ஆனால், அதற்காக அப்படியே விட்டு விட முடியாது.
ஏனென்றால் தோஹர் தொடர்ந்து இரண்டு மாதம் தூங்குவார். அப்போது சாப்பிடாமல், நீர் குடிக்காமல் இருந்தால் அவரது உயிருக்கே அது ஆபத்தாகி விடும். எனவே குறிப்பிட்ட இடைவெளியில் அவருக்கு திரவ வடிவில் உணவு மற்றும் நீரை உட்செலுத்துவார்கள். இதற்கு செலவு அதிகம் என்பதால், அந்நாட்டு அரசு தேவையான உதவிகளைச் செய்து வருகிறது.
ஆனால் கடந்த 2 மாதங்களாக தோஹருக்கு கொலம்பியா அரசு மருத்துவ உதவிகளை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே இது பற்றி தோஹாரின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார். ஊடகங்களில் வெளியான செய்தி மூலம் தோஹரின் இந்த விநோதமான நோய் அந்நாட்டு மக்களுக்கு தெரிய வந்துள்ளது.
தற்போது தோஹர் விவகாரம் சமூகவலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. தோஹருக்காக பலர் இரக்கம் தெரிவித்த போதும், இப்படி ஒரு வினோத நோயா என ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர். சிறுவயதில் கேட்ட கதைகளில் வருவது போல், நிஜ ஸ்லீப்பிங் பியூட்டியாக தோஹர் இருக்கிறாரே என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications