மலேசிய விமானம் மாயமாகி 6 மாதம்: இன்னும் அதிசயத்தை எதிர்பார்க்கும் சீனர்கள்
பெய்ஜிங்: மலேசிய விமானம் எம்.ஹெச். 370 மாயமாகி 6 மாதம் ஆகியதையொட்டி சீன பயணிகளின் உறவினர்கள் புத்த கோவில்களில் இன்று பிரார்த்தனை செய்தனர்.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசிய விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. செயற்கைக்கோள் தகவலின்படி விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விமானத்தை தேடும் பணி மாதக்கணக்கில் நடந்து வருகிறது.
6 மாதங்கள்
விமானம் மாயமாகி 6 மாதங்கள் ஆனதையொட்டி அதில் பயணம் செய்த சீனர்களின் உறவினர்கள் பெய்ஜிங்கில் உள்ள பிரபல புத்த கோவில்களில் கூடி இன்று பிரார்த்தனை செய்தனர்.
விரட்டிய போலீசார்
பிரார்த்தனையின்போது ஒருவர் கவிதை வாசிக்க சிலர் அதை கேட்டு அழுதனர். அப்போது அவர்களை அங்கிருந்து செல்லுமாறு போலீசார் விரட்டவே அவர்கள் கோபம் அடைந்தனர்.
அதிசயம்
விமானம் மாயமாகி ஆறு மாதங்கள் ஆன போதிலும் தங்களின் உறவினர்கள் உயிரோடு வரும் அதிசயம் நடக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் சீன மக்கள்.
இந்திய பெருங்கடல்
இந்திய பெருங்கடலுக்கு அடியில் 60 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பகுதியில் விமானத்தை தேட சர்வதேச குழுக்கள் தயாராகி வருகின்றன. இம்முறை நிச்சயம் விமானத்தின் பாகங்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.