கறுப்புப் பணத்தை மீட்க ஒத்துழைக்க வேண்டும்: 'பிரிக்ஸ்' தலைவர்களுக்கு மோடி வேண்டுகோள்!
பிரிஸ்பேன்: வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்பது முதன்மையான முன்னுரிமை. இதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி மியான்மர் நாட்டில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து விமானம் மூலம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு நேற்று சென்றார். ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அவரது முதல் நிகழ்ச்சியாக நேற்று அங்குள்ள குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு சென்றார். அதனைத் தொடர்ந்து இன்று தொடங்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
முனந்தாக பிரிக்ஸ் நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்யா அதிபர் விளாடிமீர் புதின், தென் ஆப்பிரிக்கா அதிபர் ஜோக்கப் ஜூம்மா மற்றும் பிரேசில் அதிபர் டில்மா ரூசோப் கலந்துக் கொண்டனர்.
இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
பிரிக்ஸ் நாடுகள் உருவாக்கிய வங்கியானது விரைந்து செயல்பட வேண்டும் என்பதில் இந்தியா ஆர்வம் கொண்டுள்ளது. இந்த வங்கியானது வரும் 2016ஆம் ஆண்டு முதல் செயல்பட வேண்டும்.

பிரிக்ஸ் வங்கிக்கான பிரதிநிதியை இந்திய அரசு விரைவில் அறிவிக்கும். வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணங்களை மீட்பது நம்முடைய முக்கிய முன்னுரிமை.
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள பணங்களை மீட்கும் விவகாரத்தில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கணக்கில் வராத பணம் பாதுகாப்பு சவால்களுடன் தொடர்பு கொண்டது. வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்கும் பணியில் இந்தியா ஏற்கனவே இறங்கிவிட்டது.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
இம்மாநாட்டைத் தொடர்ந்து ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.












Click it and Unblock the Notifications