அமெரிக்காவில் கருப்பர் இனத்தவரின் போராட்டம் நீடிக்கிறது... திணறுகிறது போலீஸ்!
பெர்குசன், அமெரிக்கா: அமெரிக்காவில் கருப்பர் இனத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் மைக்கேல் பிரவுன் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட செயலைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட வெள்ளை அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் நடந்து வரும் கலவரம் தொடர்வதால் அதைத் தடுக்க முடியாமல் அமெரிக்க போலீஸார் திணறி வருகின்றனர்.
பெர்குசன் நகரில்தான் கலவரம் உச்சத்தில் உள்ளது. இங்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், போராட்டங்கள் குறைந்தபாடில்லை. வன்முறையும் தொடர்கிறது.
போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல்கள் நடந்துள்ளன. செயின்ட் லூயிஸ் நகரின் புறநகர்ப் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. இங்கு கருப்பர் இனத்தவர் அதிகம் வசிக்கின்றனர்.

ஆகஸ்ட் 18ம் தேதி டேரன் வில்சன் என்ற வெள்ளையர் இன போலீஸ் அதிகாரி, கடை ஒன்றில் திருடி விட்டு வெளியே ஓடி வந்த பிரவுனைத் தடுத்து 6 முறை சுட்டார். இதில் தலையில் 2 குண்டுகள் பாய்ந்ததில் பிரவுன் சம்பவ இடத்திலேயே பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு கலவரம் வெடித்துள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸ் செக் போஸ்ட் ஒன்றை நோக்கி போராட்டக்காரர்கள், கிட்டத்தட்ட 5000 பேர், ஊர்வலமாக சென்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்த போலீஸார் 75 முறை கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். ஆனால் இரவு 9 மணியளவில் அவர்கள் திரும்பி வந்தனர். இதையடுத்து மீண்டும் கண்ணீர்ப் புகை குண்டு வீசப்பட்டது.
தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருவதால் போராட்டத்தை ஒடுக்க முடியாமல் போலீஸார் திணறி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டாம் என்று போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications