இல்லத்தரசிகளே உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.. இனி பிரியாணி செய்ய மாஸ்டரைத் தேட வேணாம் பாஸ்!
சென்னை: சமையல் பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக இந்தியாவின் முதல் சமையல் செய்யும் இயந்திர மனிதன் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
குடிசை வீடோ மாடமாளிகையோ, வீடு என்று ஒன்று இருந்தால் நிச்சயம் அதில் சமையலறை என ஒன்று இருக்கும். இருக்க வேண்டும். அப்படி இல்லாத வீடு வீடாகவே எடுத்துக் கொள்ளப்படாது. அந்தளவிற்கு வீட்டின் முக்கியமான பகுதி சமையலறை.
அங்கு இல்லத்தரசிகள் உணவோடு பாசத்தையும் கலந்து கொடுக்கும் போது தான் வீட்டில் உள்ளவர்களின் வயிறு நிறையும். ஆனால், சமயங்களில் அவர்களை சமையலறையிலேயே கட்டிப் போட நினைக்கும் போது, அதன் பலன் உணவில் எதிரொலிக்கும்.
சலிப்போடு சமைக்கும் உணவு ருசிக்காது. ஒரு நாள் செய்த மாதிரி மறுநாளும் ருசி கிடைக்காது. இதனால் பெண்களும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்.

ரோபோ செப்
ஆனால் இனி அப்படிப்பட்ட பிரச்சினை இருக்காது. பெண்களுக்கு வரப்பிரசாதமாக வந்து விட்டது இந்தியாவின் முதல் இயந்திர சமையல் மனிதன். சமையலறையில் பெண்களின் வேலையை இலகுவாக்க ஏற்கனவே மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் என தொழில்நுட்பத்தின் உதவியால் பல கருவிகள் புழக்கத்தில் உள்ளன. தற்போது அதோடு ஒன்றாக இந்த ரோபோ செப் எனப்படும் இயந்திர மனிதனும் இணைந்து விட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.

சமையல் நேரம் குறையும்
இந்த ரோபோ செப் மூலம் வீட்டிலேயே மக்கள், சுவையாகவும், ஆரோக்கியமாகவும், சுகாதாரமுறையில் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட முடியும். அதோடு பெண்களுக்கும் அவர்கள் சமையல் அறையில் இருக்கும் நேரம் குறையும்.

5 ஆண்டு உழைப்பு
இது குறித்து இந்ந இயந்திர மனிதனை வடிவமைத்த குழுவின் தலைவரும், ரோபோசெஃப் நிறுவனத்தின் உரிமையாளருமான சரவணன் சுந்தரமூர்த்தி கூறுகையில், "மென்பொருள் நிபுணராக நான் பதினோரு ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, உணவுத்துறையில் ஏதேனும் சாதனை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னுடைய குழுவினருடன் இணைந்து ஆய்வு செய்து, இந்த ரோபோசெஃப் என்ற இயந்திர மனிதனை வடிவமைத்திருக்கிறோம்.

600 வகை ரெசிபி
இந்த இயந்திர மனிதன் அறுநூறு வகையான ரெசிபிகளை சமைக்கும் வகையில் வடிவமைத்திருக்கிறோம். அதில் இந்தியன், சைனீஸ், வியட்நாமீஸ், தாய்லாந்து நாட்டு உணவுவகைகள் என பல நாட்டு உணவுகளையும் சமைக்கும் வகையில் தயாரித்திருக்கிறோம். இதன் மூலம் தினமும் 3,000 நபர்களுக்கு சமைத்து, விநியோகிக்கிறோம்.

உலகெங்கும் ஒரே சுவை
ரோபோ செப் மூலம் ஒரே மாதிரியான சுவையை அனைத்து விதமான உணவு வகைகளிலும் அளிக்க முடியும். உதாரணத்திற்கு மதுரை சிக்கன் பிரியாணியை எங்களுடைய ரோபோ செஃப் சமைத்தால், மதுரை, இந்தியா மட்டுமல்லாமல் உலகின் வேறு எங்கு சுவைத்தாலும் ஒரே மாதிரியான சுவையைத்தான் தரும். இது ரோபோசெஃபின் மிகப்பெரும் பலன் என்று கூறலாம்.

கடின உழைப்பின் பலன்
தற்போது நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் ரோபோசெப் பதினெட்டாவது ஹார்ட்வேர் வெர்ஷன். ஒவ்வொரு முறையும் பிரத்யேகமான முறையில் மீண்டும் மீண்டும் ரீடிசைன் செய்து கொண்டேயிருந்தோம். ஒன்றை நினைத்து அதில் முழு மனதுடன் பணியாற்றி வெற்றிகிடைக்கும் என்ற மனநிலையில் குழுவாக இணைந்து கடினமாக பணியாற்றியதால் இதனை உருவாக்க முடிந்தது" எனத் தெரிவித்துள்ளார்.

இரண்டு வகை ரோபோசெப்
ரோபோசெப்பை பொறுத்த வரை இரண்டு வகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று வணிக நோக்கம் கொண்டது. மற்றொன்று ரோபோசெப் மினி. இது இல்லத்தரசிகளுக்கு ஏற்றது. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி,சாம்பார், ரசம், சக்கரைப்பொங்கல், வெண்பொங்கல் என அறுநூறுக்கும் மேற்பட்ட உணவு வகைகளை இது தயாரிக்கும்.

எளிய பணி
ரோபோசெப்பிடம் வேலை வாங்குவதும் எளிது தானாம். சமைக்கும் முன்னர் நீங்கள் என்ன உணவை தயாரிக்கவேண்டுமோ, அதற்கு தேவைப்படும் பொருள்களை கடையிலிருந்து வாங்கி, அல்லது வீட்டிலிருந்து அதிலிருந்து எடுத்து, இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் சிறிய வடிவிலான பெட்டி போன்ற ஹாப்பர்ஸ் அமைப்பில் வைத்து விடவேண்டும். அவ்வளவுதான் ரோபோசெப் குறைவான நேரத்தில், சுவையான உணவை தயாரித்து தந்து விடுவார்.

மேக் இன் இந்தியா விருது
இந்த ரோபோ செப் ‘மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் சிறந்த ஸ்டார்ட்டப் நிறுவனம் என்ற விருதைப் பெற்றிருக்கிறது. துபாய் அரசின் உதவியுடன் அங்கு நடைபெற்ற உலகளவிலான கண்காட்சியில் இடம்பெறுவதற்காக இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டு பாராட்டுகளை அள்ளியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications