பாகிஸ்தானுக்கு செக்.. கையைப் பிசையும் சீனா! இந்தியாவுக்கு ரஷ்யா செய்த பேருதவி .. அதென்ன எஸ்-400?
மாஸ்கோ: பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ரஷ்யா சென்று வந்திருந்த நிலையில், தற்போது இந்தியாவுக்கு 120 அதிநவீன ஏவுகணைகளை ரஷ்யா விநியோகித்திருக்கிறது. இந்த வகை ஏவுகணைகள் தரையிலிருந்து வானிலிருக்கும் இலக்கை சென்று தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்திய - ரஷ்ய உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2021ல் டெல்லியில் இந்த மாநாடு நடைபெற்றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்றார். அதன் பிறகு 2022, 2023ம் ஆண்டுகளில் உச்சி மாநாடு நடைபெறவில்லை. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி ஜூலை 8,9 தேதிகளில் ரஷ்யாவில் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்பதற்காக ஜூலை 8ம் தேதி மோடி மாஸ்கோ சென்றடைந்தார். இந்த சந்திப்பில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனை தொடர்ந்து தற்போது இந்தியாவுக்கு நவீன ரக ஏவுகணைகள் 120 விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வகை ஏவுகணைகள் தரையிலிருந்து வானத்தில் உள்ள இலக்கை மிகச் சரியாக தாக்கி அழிக்கும். குறிப்பாக போர் விமானங்களை எளிதில் தாக்கி அழிக்கும்.
கடந்த 2019ம் ஆண்டு பாலக்கோட் பகுதியில் பாகிஸ்தானின் எல்லைக்கோட்டை கடந்து சென்று பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியிருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்று அச்சம் எழுந்து வருகிறது. இப்படி இருக்கையில், ரஷ்யா கொடுத்திருக்கும் ஏவுகணை இந்த அச்சுறுத்தலை சமாளிக்கும்.
ஏற்கெனவே சீனாவுடன் மோதல் போக்கு இருந்தபோது இந்தியாவுக்கு எஸ் 400 வகை ஏவுகணையை கொடுத்து உதவியது ரஷ்யாதான். ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 என்ற அதி நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளை 5 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்க இந்தியா கடந்த 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. அமெரிக்காவின் பொருளாதார தடை எச்சரிக்கையையும் மீறி இந்த ஏவுகணைகளை இந்தியாவுக்கு ரஷ்யா விநியோகம் செய்தது. முதல்கட்டமாக 2ஐதான் ரஷ்யா விநியோகம் செய்தது. இரண்டாவதாக மீதி உள்ளதை விரைவில் விநியோகம் செய்ய இருக்கிறது.
இந்த வகை ஏவுகணைகள் கண்டம் விட்டு கண்டம் பாயும் தன்மை கொண்டவை. என்னதான் ஏவுகணை இடைமறித்து தாக்கும் அம்சத்தை கொண்டிருந்தாலும் இதை மறித்து தாக்கி அழிப்பது சாத்தியமில்லாது. எனவே உலகம் முழுவதும் இந்த ஏவுகணைக்கு டிமாண்ட் அதிகமாக இருக்கிறது. இந்தியாவுக்கு வந்த இந்த ஏவுகணை தற்போது சீன எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கிறது.
இது கப்பல், விமானம், சக பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ஹைபர்சோனிக் ஏவுகணைகளை தாக்கியழிக்கும் திறன் கொண்டதாகும். இந்த ஏவுகணைகளை உத்தரவு கிடைத்த 10 நிமிடத்தில் இதை ஏவிவிட முடியும். குறிப்பாக இதை எந்த இடத்திலிருந்தும் எந்த இடத்திற்கும் கொண்டு செல்ல முடியும். எனவே உலகின் சக்தி வாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்பாக இது கருதப்படுகிறது.
தற்போது இதனை தொடர்ந்து, சிறிய இலக்குகளை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஏவுகணைகளை ரஷ்யா, இந்தியாவுக்கு வழங்கியிருப்பது சர்வதேச அளவில் பெரும் கவனத்திற்கு உள்ளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications