"உக்ரைன் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.." ஓப்பனாக எச்சரிக்கும் புதின்.. சமாளிப்பாரா ஜெலன்ஸ்கி?
மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 10 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைன் நாட்டிற்கு வெளிப்படையாகவே அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ஜன. முதல் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த பிப். 24ஆம் தேதி முழு வீச்சில் போரைத் தொடங்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். 11ஆவது நாளாக இன்றும் போர் தொடர்கிறது.
உலக நாடுகளின் கண்டனங்களும் பொருளாதாரத் தடை அறிவிப்புகளும் புதினை எந்த விதத்திலும் நிறுத்தவில்லை. உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.

போர் நிறுத்தம் பலன் இல்லை
இதனிடையே கடந்த பிப். 27 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் மரியுபோல் மற்றும் வோல்னோவாகா நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், போர் நிறுத்த அறிவிப்பு வெளியானாலும் கூட இரு நகரங்களில் இருந்தும் பொதுமக்கள் யாரும் வெளியேறவில்லை என்றே செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது.

ரஷ்யா தாக்குதல்
பொதுமக்கள் காயமடைந்த வீரர்கள் வெளியேறும் முன்னரே ரஷ்ய ராணுவம் தாக்குதலை மீண்டும் தொடங்கியதால் அவர்களால் வெளியேற முடியவில்லை. நேற்று (மார்ச் 5) நள்ளிரவிலேயே உக்ரைன் நாட்டின் பல இடங்களில் ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா தொடங்கிவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சூழலில், போர் நிறுத்தம் தோல்வி அடைய உக்ரைன் அதிகாரிகளே காரணம் எனச் சாடியுள்ள புதின், உக்ரைன் அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதின் எச்சரிக்கை
இது தொடர்பாக ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் அவர் பேசுகையில், "உக்ரைன் தேவையற்ற செயல்களைச் செய்வதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இதை அவர்கள் தொடர்ந்தால் உக்ரைன் நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். ரஷ்யாவின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் சர்வதேச நாடுகள் பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன. இது கிட்டதட்ட ரஷ்யாவுக்கு எதிராகப் போரை அறிவிப்பதற்குச் சமமானவை. இந்தப் பொருளாதாரத் தடைகளால் ரஷ்யா பாதிக்கப்படவில்லை" என்று அவர் தெரிவித்தார்.

சர்வதேச நாடுகள்
ரஷ்யா மீது உலகின் பல்வேறு நாடுகளும் பொருளாதார தடைகளை அறிவித்து வருகிறது. புதின் மற்றும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சரின் சொத்துகளை முடக்க ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல உலகின் பல்வேறு நாடுகளும் ரஷ்ய விமானங்கள் தங்கள் வான்வழியைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளன. இன்றைய தினம் விசா மற்றும் மாஸ்டர் பணப் பரிவர்த்தனை நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு வழங்கி வரும் தங்கள் சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.

உக்ரைன் அமைச்சர் கோரிக்கை
இதற்கிடையே சர்வதேச நாடுகள் ரஷ்யா போரை நிறுத்த அழுத்தம் தர வேண்டும் என உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "உக்ரைன் நாட்டின் விவசாயப் பொருட்களை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்று இந்தியா. இந்தப் போர் தொடர்ந்தால், அறுவடை செய்ய முடியாது. இது சர்வதேச மற்றும் இந்திய உணவுப் பாதுகாப்பில் சிக்கலை ஏற்படுத்தும். எனவே இந்தப் போரை இப்போதே நிறுத்துவது தான் நல்லது. இந்தப் போர் அனைவரது நலனுக்கும் எதிரானது" என்றார். இதனிடையே உக்ரைன் ரஷ்யா நாடுகளுக்கு இடையே நாளை அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.











Click it and Unblock the Notifications