"பூகம்பம்+ எரிமலை வெடிப்பு+ சுனாமி.." ரஷ்யாவில் 6.8 ரிக்டரில் மீண்டும் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு
மாஸ்கோ: ரஷ்யாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வலிமையான நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டிருந்தது. இதற்கிடையே சில நாட்கள் இடைவெளியில் அங்கு மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் குரில் தீவுகளில் சுமார் 6.8 ரிக்டரில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ரஷ்யாவில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து ரஷ்யா மற்றும் ஜப்பான் நாடுகளில் சுனாமியும் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் மக்களிடையே அச்சம் இருந்தது. இதற்கிடையே ரஷ்யாவில் இப்போது மீண்டும் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

7 ரிக்டரில் நிலநடுக்கம்
ரஷ்யாவின் குரில் தீவுகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் முதலில் ரிகடர் அளவுகோலில் 6.8ஆக இருந்ததாகக் கூறப்பட்டது. இருப்பினும், பிறகு இந்த நிலநடுக்கம் 7 ரிக்டர் அளவினதாக இருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வலிமையான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கை
ஜப்பானின் ஹொக்கைடோவில் இருந்து ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பம் வரை நீண்டுள்ள எரிமலை தீவுக்கூட்டமான குரில் தீவுகளுக்கு அருகே, 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் அல்லது பொருள் சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், கம்சட்காவின் பல கடலோரப் பகுதிகளுக்குச் சுனாமி அலைகள் வரக்கூடும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
இது குறித்து ரஷ்ய அதிகாரிகள் கூறுகையில், "சுனாமி அலைகள் உயரம் குறைவாகவே இருக்கும் என்று நினைக்கிறோம். இருப்பினும், கடற்கரைக்கு மக்கள் செல்லக்கூடாது. கடற்கரைக்கு அருகே வசிப்போர் உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளனர். மேலும், பெரிய பசிபிக் அளவிலான சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிமலை வெடிப்பு
அதேநேரம் இந்த தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் அங்கு ஒரு நீண்டகாலமாக அமைதியாக இருந்த எரிமலையை எழுப்பியுள்ளன. ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் அமைந்துள்ள க்ராஷெனினிகோவ் எரிமலை திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. கடந்த 600 ஆண்டுகளில் முதல்முறையாக அந்த எரிமலை வெடித்துள்ளது. இதனால் 6,000 மீட்டர் உயரத்திற்குச் சாம்பல் உருவாகியுள்ளது. பாதுகாப்பு கருதி விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு "ஆரஞ்சு" எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதாவது தொடர்ச்சியான வெடிப்புகளால் விமானப் போக்குவரத்து இடையூறு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, யூரேசியாவின் மிக உயரமான எரிமலைகளில் ஒன்றான க்ளூசெவ்ஸ்காய் எரிமலை கம்சட்கா அருகே ஏற்பட்ட 8.8 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வெடித்தது. எரிமலை குழம்பு வெடித்துச் சிதறியது. அதைத் தொடர்ந்து அடுத்து ஒரு வாரத்திற்குள் இதே குரில் பகுதியில் சக்திவாய்ந்த 6.7 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது.
வல்லுநர்கள் எச்சரிக்கை
அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவது குறித்து வல்லுநர் ஒருவர் கூறுகையில், "பசிபிக் தட்டின் இயக்கம் கவலையளிக்கிறது. கம்சட்கா மற்றும் குரல் தீவுகள் அதிக பாதிப்பை எதிர்கொள்ளலாம். உலகின் மிகப் பெரிய நிலநடுக்கங்களில் 80 சதவீதத்திற்கும் மேல் பசிபிக் ரிங் ஆஃப் பயர் பகுதியில் தான் ஏற்படுகிறது. இதனால் அருகே உள்ள அதிக ஆபத்துள்ள கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications