அடேங்கப்பா... கம்மி விலையில்,.. இவ்வளவு தடுப்பாற்றலா... ரஷ்யாவை நோக்கி திரும்பும் உலக நாடுகள்
மாஸ்கோ: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அதிக பலனை அளிப்பதாக முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளின் பார்வையும் ரஷ்யாவை நோக்கித் திரும்பியுள்ளது.
உலகில் தற்போது உருமாறிய கொரோனா பரவலும் அதிகரித்துள்ளதால், முடிந்த வரை விரைவில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து நாடுகளும் முயன்று வருகிறது. இருப்பினும், தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏதுவாக தடுப்பூசிகளின் உற்பத்தி இல்லை. இதனால் கொரோனா தடுப்பூசிகளுக்கு பெரும் தட்டுப்பாடு உள்ளது.
இந்தச் சூழ்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன், லான்செட் மருத்துவ இதழில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி 90% மேல் பலன் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பல்வேறு நாடுகளும் தற்போது ரஷ்யாவிடம் தடுப்பூசியைக் கோரியுள்ளது.
ஸ்புட்னிக் வி
உலக நாடுகள் தடுப்பூசி குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருந்த போதே, கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசிக்கு ரஷ்யா ஒப்புதல் அளித்திருந்தது. ரஷ்யாவின் முதல் விண்கலமான ஸ்புட்னிக் நினைவாக இந்தப் பெயர் வைக்கப்பட்டது. இருப்பினும், மூன்றாம்கட்ட சோதனைக்கு முன்னரே அனுமதி அளிக்கப்பட்டதால் இந்தத் தடுப்பூசிக்கு ஒப்புதல் தர பல்வேறு உலக நாடுகளும் தயக்கம் காட்டின.
மருத்துவ சோதனை முடிவுகள்
இந்நிலையில், சுமார் 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட மருத்துவ சோதனையில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி 91.6% பலன் அளிப்பது தெரியவந்தது. அமெரிக்காவின் ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கு இணையாக ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் பலன் தருகிறது. அதேநேரத்தில் அமெரிக்காவின் தடுப்பூசிகளை விட இதன் விலை மிகவும் குறைவு. மேலும், சாதாரண ஃப்ரிட்ஜில்கூட ஸ்புட்னிக் வி தடுப்பூசியைச் சேமிக்கலாம், இதனால், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளிலும், அதிக வெப்பநிலை கொண்ட நாடுகளிலும் ரஷ்ய தடுப்பூசியே பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு நாடுகள் அனுமதி
சோதனை முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளன. குறிப்பாக லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த பல்வேறு நாடுகளும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளன. கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், மற்ற தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால் பல நாடுகளும் இப்போது ரஷ்ய தடுப்பூசி பக்கம் திரும்பியுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம்
அதிலும் குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அனுமதிப்பது குறித்த விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது. மற்ற நாடுகளைப் போல இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு தடுப்பூசியை அனுமதிக்க சில மாதங்கள் வரை கூட ஆகும். தீவிர ஆய்வுக்குப் பின்னரே அனுமதி வழங்கப்படும். இந்தச் சூழலில் ஐரோப்பிய ஒன்றியம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கும்பட்சத்தில் அது, ரஷ்யாவின் பெரும் சாதனையாக அமையும்,
இந்தியாவிலும் அனுமதி
இந்தியாவிலும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் மூன்றாம்கட்ட சோதனை நடைபெற்றது. விரைவிலேயே இந்தியாவும் பிரேசிலும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 19 நாடுகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியை அதிகப்படுத்துவதற்காக தற்போது ரஷ்யா தவிர இந்தியா, தென் கொரியா, பிரேசில் ஆகிய நாடுகளிலும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தி செய்யப்படுகிறது.
ரஷ்ய மக்கள் தயக்கம்
இப்படி உலக நாடுகள் பலரும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி மீது மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தாலும், ரஷ்யாவில் இந்தத் தடுப்பூசிக்கான வரவேற்பு பெரியளவில் இல்லை. பலரும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை எடுத்துக்கொள்ளத் தயங்குகின்றனர். அதிலும், கடந்த டிசம்பர் மாதம் அந்நாட்டின் அதிபர் புடின், தான் இன்னும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறினார். இதனால் தடுப்பூசி குறித்த நம்பகத்தன்மை அந்நாட்டு மக்களிடம் அதிகரிக்கவில்லை