"கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.." ஸ்வீடன் & பின்லாந்துக்கு ரஷ்யா திடீர் வார்னிங்! பரபர தகவல்
மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இப்போது திடீரென ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவத்தைக் கடந்த சில வாரங்களாகவே அதிபர் புதின் குவித்து வந்தார். இந்தச் சூழ்நிலையில், உக்ரைன் மீது முழு வீச்சில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்க அதிபர் புதின் ஆணையிட்டார்.
அதன்படி உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை நேற்று தொடங்கிய நிலையில், அது 2ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. ரஷ்யாவின் நடவடிக்கைக்கு உலகின் பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

பொருளாதார தடைகள்
ஏற்கனவே, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க தொடங்கி உள்ளன. இருப்பினும், சீனா உள்ளிட்ட சில நாடுகளின் ஆதரவு ரஷ்யாவுக்கு உள்ள நிலையில், புதின் இந்த தடைகளைக் கண்டு எல்லாம் அஞ்சியதாகத் தெரியவில்லை. உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவது குறித்து வெளியான தகவல் காரணமாகவே, அந்நாட்டின் மீது ரஷ்யா இப்போது ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளது.

ஃபின்லாந்து ஸ்வீடன்
இருப்பினும், ரஷ்யாவின் இந்த நடவடிக்கை காரணமாகக் கிழக்கு ஐரோப்பாவின் வேறு சில நாடுகளும் நேட்டோ அமைப்பில் இணைவது குறித்து ஆலோசிக்கத் தொடங்கி உள்ளது. குறிப்பாக, ஃபின்லாந்து பிரதமர் சன்னா மரின், ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை நேட்டோ அமைப்பில் இணைவது தொடர்பாக ஆலோசிக்க வேண்டிய சூழலை உருவாக்கி உள்ளதாகத் தெரிவித்தார். ஸ்வீடன் அரசும் கூட இதே போல ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியானது. இது ரஷ்யாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யா எச்சரிக்கை
நேட்டோ அமைப்பில் இப்போது அமெரிக்கா, கனடா மற்றும் 28 ஐரோப்பிய நாடுகள் உள்ளன. கிழக்கு ஐரோப்பாவின் நாடுகள் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் நேட்டோ அமைப்பில் இணைந்தால், அது தனது பாதுகாப்புக்கு பெரும் பிரச்சினையைத் தரும் என்றே ரஷ்யா கருதுகிறது. இந்தப் போரையை ரஷ்யா அதற்காகத் தான் தொடங்கி உள்ளது. இந்நிலையில், இதர கிழக்கு ஐரோப்பிய நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைந்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ரஷ்ய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா எச்சரித்துள்ளார்.

கடந்த காலங்கள்
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய மரியா ஜாகரோவா, "வடக்கு ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் ஃபின்லாந்து அரசின் ராணுவ அல்லாத கூட்டணியின் கொள்கை முக்கியமானது. ஆனால். நேட்டோ அமைப்பு இப்போது ஃபின்லாந்து மற்றும் ஸ்வீடனை இலக்காக வைத்து, அவர்களை நேட்டோவில் சேர்க்க முயற்சி எடுத்து வருவதைப் பார்க்க முடிகிறது. இது குறித்து இவர்கள் கடந்த காலங்களிலும் ஆலோசித்துள்ளனர் என்பது உண்மை தான்.

கடும் நடவடிக்கை
கடந்த காலங்களில் இரு நாடுகளும் நேட்டோ ராணுவப் பயிற்சிகளைக் கூட நடத்தியுள்ளனர். நேட்டோ அமைப்புகளுக்கு ஆதரவாகவே இந்த இரு நாடுகளும் செயல்பட்டு வருகின்றன. பின்லாந்தும் ஸ்வீடனும் மற்ற நாடுகளின் பாதுகாப்பிற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தங்கள் பாதுகாப்பு முடிவுகளை எடுக்கக் கூடாது. இந்த இரு நாடுகளும் நேட்டோ அமைப்பில் இணைவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதற்காக இரு நாடுகளும் ராணுவ ரீதியாகவும் சரி, அரசியல் ரீதியாகவும் சரி விளைவுகளைச் சந்திக்க நேரிடும்"என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications