பீரங்கி வண்டி ஏற்றி ரஷ்யா தளபதி கொலை! சொந்த வீரர்களே வீழ்த்தியதாக தகவல்!
கீவ்: உக்ரைனில் போருக்கு மத்தியில் ரஷ்ய வீரர்கள் தங்களது தளபதியை பீரங்கி வண்டி ஏற்றி கொலை செய்துள்ளதாக மேற்கத்திய அதிகாரிகள் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை ஒரு மாதத்தை கடந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இன்னும் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றவில்லை. இதனால் போர் முடிவுக்கு வருவது கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த போரில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உக்ரைனில் அப்பாவி மக்களும் பலியாகி வருகின்றனர். ரஷ்யா தரப்பிலும் படை வீரர்கள் அதிகாரிகள் இறந்து வருகின்றனர்.

படை தளபதி கொலை
இந்நிலையில் தான் உக்ரைன் போர் நடவடிக்கையின்போது ரஷ்யாவின் படை தளபதியை அந்த வீரர்கள் கொலை செய்துள்ளதாக மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை உக்ரைன் பத்திரிகையாளர் ரோமன் சிம்பால்யுக்கும் உறுதி செய்துள்ளார். இதுகுறித்த விபர்ஙகளை அவர் தனது பேஸ்புக்கில் கூறியுள்ளார்.

வீழ்த்திய வீரர்கள்
அவர் கூறுகையில், ரஷ்யாவின் 37வது ரைபிள் படைப்பிரிவின் கர்னல் யூரி மெட்வெடேவ் தனது படை வீரர்களால் வீழ்த்தப்பட்டுள்ளார். முன்னதாக இந்த படையில் உள்ள வீரர்கள் சிலர் இறந்தனர். இவரது தவறான நடவடிக்கையால் தான் அவர்கள் பலியானதாக மனச்சோர்வில் வீரர்கள் இருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பீரங்கி வண்டி ஏறியதில் காலில் காயமடைந்த அவர் பொலாரஸில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டபோது இறந்தார் என தெரிவித்துள்ளார்.

7 தளபதிகள் பலி
இதற்கிடையே ரஷ்யா சார்பில் 7 படை தளபதிகள் இறந்துள்ளதாக மேற்கத்திய நாடுகள் தரப்பில் கூறப்படுகிறது. இதில் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினுக்கு நெருக்கமான 49வது ஒருங்கிணைந்த ஆயுதப்படையின் லெப்டினன்ட் ஜெனரல் யாகோவ் ரெசான்ட்சேவும் ஒருவர் எனவும் கூறப்படுகிறது. இவர் தான் போர் துவங்கிய 4 வது நாள் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசினார். அப்போது, ‛‛உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை இன்னும் சில மணிநேரங்களில் முடிவுக்கு வந்துவிடும்'' என தெரிவித்து இருந்தார். ஆனால் போர் தொடங்கி ஒரு மாதமாகியும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா மறுப்பு
இதுவரை ரஷ்யா தரப்பில் 12 ஆயிரம் படை வீரர்களுக்கும் அதிகமாக இறந்துள்ளதாக உக்ரைன், மேற்கத்திய நாடுகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இதை ரஷ்யா முழுவதுமாக மறுத்துள்ளது. போர் துவங்கிய ஒரு மாதத்தில் 1300 ராணுவ வீரர்கள் பலியாகி பலியாகி உள்ளதாகவும், 3835 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்யா கூறியுள்ளது. மேலும், ரஷ்யா நாட்டின் இழப்பை மேற்கத்திய நாடுகள் பலமடங்கு அதிகரித்து போலி தகவல்களை வெளியிடுவதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications