இனி ரஷ்யாவில் இவை இல்லை.. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் “பயங்கரவாதிகள்.. மெட்டாவுக்கு ஷாக் கொடுத்த ரஷ்யா
மாஸ்கோ : உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவுக்கு எதிரான கருத்துகள் இடம்பெற "மெட்டா" அனுமதித்ததாக புகார் கூறிய நிலையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பயங்கரவாத இயக்கங்கள் எனக் குறிப்பிட்டு ரஷ்ய நீதிமன்றம் அவற்றுக்கு தடை விதித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து 25 நாட்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் என இரு நாட்டு மக்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகி உள்ளனர்.
உக்ரைனின் சிறு நகரங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில், பெரிய நகரங்களை கைப்பற்ற தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இதனால் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்தி உள்ளன.

ரஷ்யாவில் தடை
ரஷ்யப் படையினருக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் கருத்துகள் பதிவிடப்படுவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல் தொடர்புத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்தார். ரஷ்யா ஏற்கெனவே ஃபேஸ்புக் தளத்திற்கும் தடை விதித்தது. ட்விட்டர் தளத்தையும் பகுதியளவே அனுமதித்துள்ளது.

யூடியூப் தடை
மேலும் ரஷ்ய அரசு சேனல்களை தங்கள் தளம் மூலம் உலகெங்கும் ஒளிபரப்பப்படுவதற்கு யூடியூப் தடை விதித்தது. ரஷ்ய அரசு ஊடகங்கள் தங்கள் தளத்தை பயன்படுத்த ஃபேஸ்புக்கும் இன்ஸ்டாகிராமும் ஏற்கெனவே தடை விதித்துள்ளன. இதற்கிடையே வணிகத்திற்கு உகந்த நாடுகள் பட்டியலில் இருந்து ரஷ்யாவை அமெரிக்கா நீக்கியுள்ளது. அதனால் ரஷ்யாவிற்கு பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.

மெட்டா மீது புகார்
இந்நிலையில் உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவுக்கு எதிரான கருத்துகள் இடம்பெற "மெட்டா" அனுமதித்ததாக புகார் கூறிய நிலையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பயங்கரவாத இயக்கங்கள் எனக் குறிப்பிட்டு ரஷ்ய நீதிமன்றம் அவற்றுக்கு தடை விதித்துள்ளது. உக்ரைனில் உள்ள சமூக ஊடக பயனர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் பிப்ரவரி 24 அன்று உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட ரஷ்ய படைகளுக்கு எதிராக வன்முறையை வலியுறுத்தும் செய்திகளை பதிவிட மெட்டா அனுமதிப்பதாக ரஷ்யா கூறியிருந்தது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம்க்கும் தடை
இந்த புகாரில் இன்ஸ்டாகிராம் தடுக்கப்பட்ட நிலையில், ரஷ்ய ஊடகங்களுக்கான அனுமதியையும் கட்டுப்படுத்தியதற்காக ரஷ்யா ஏற்கனவே பேஸ்புக்கைத் தடை செய்துள்ளது. இந்நிலையில் இரு சமூக ஊடகங்களும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணை போவதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், ரஷ்ய நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால் ரஷ்யாவின் இந்த நடவடிக்கை குறித்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா எந்த பதிலும் அளிக்கவில்லை என சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications