41 உயிர்களை பலி கொண்ட ரஷ்ய விமான விபத்திற்கான காரணம்.. விமானி திடுக் தகவல்!
Recommended Video
மாஸ்கோ: மின்னல் தாக்கியதே ரஷ்ய விமான விபத்திற்கு காரணம் என அதன் விமானி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஷெர்மெட்யேவ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முர்மான்க்ஸ் நகரத்துக்கு 'சுகோய் சூப்பர்ஜெட் 100' ரக விமானம் 73 பயணிள் மற்றும் விமான ஊழியர்கள் 5 பேருடன் புறப்பட்டு சென்றது.
விமானம் புறப்பட்டு பறக்க தொடங்கிய சில நிமிடங்களில், விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதை அறிந்த விமானி, விமானத்தை மீண்டும் ஷெர்மெட்யேவ் விமானநிலையத்துக்கு திருப்பி, அவசரமாக தரையிறங்க அனுமதி கோரினார். விமானநிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

விமானத்தை சூழ்ந்த தீ
அதன்படி தரையிறங்கியபோது, விமானத்தில் தீப்பிடித்தது. இதற்கிடையில் விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, ஓடுபாதையில் வேகமாக சென்றது. இதனால் தீ வேகமாக பரவி விமானத்தின் பாதியளவுக்கு தீ சூழ்ந்தது.

அவசர வழி
விமானத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீ அந்தப்பகுதி முழுவதையும் சூழந்தது. ஒருகட்டத்துக்கு பின்னர் விமானி போராடி விமானத்தை நிறுத்திவிட்டார். அதனை தொடர்ந்து, விமானத்தின் முன்பகுதியில் உள்ள அவசர வழி மூலம் பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

41 பேர் பலி
இருப்பினும் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால், அனைத்து பயணிகளையும் அவர்களால் வெளியேற்ற முடியவில்லை. தீயின் கோர நாக்குகளுக்கு 2 குழந்தைகள், 2 விமான ஊழியர்கள் உள்பட 41 பேர் பலியாயினர்.

மின்னல் தாக்கியதே..
உயிர் தப்பிய 37 பேரில் 11 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் விமான விபத்திற்கான காரணத்தை அதன் விமானி கூறியுள்ளார். அதாவது விமானத்தை மின்னல் தாக்கியதாலேயே அவசரமாக தரையிறக்கியதாகவும், இருந்தபோதும் விமானத்தில் தீப்பிடித்து விட்டதாகவும் விமானி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications