உக்ரைன் அணு உலையை நெருங்கி பாய்ந்த ஏவுகணைகள்.. அணுமின் நிலையம் மீது குறிவைத்ததா ரஷ்யா? பரபரப்பு!
மாஸ்கோ: உக்ரைனில் உள்ள இரண்டாவது பெரிய பிவ்டென்னவ்க்ரைன்ஸ்கா அணுமின் நிலையம் மீது ரஷ்ய ஏவுகணை பறந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 100 நாட்களுக்கு மேலாக தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கத்தோடு ரஷ்யாவின் ராணுவ படைகள் செயல்பட்டு வருகின்றன.
இதுவரை மருத்துவமனைகள், குடியிருப்புப் பகுதிகள், சினிமா அரங்குகள், பள்ளிகள் என ஏராளமான கட்டிடங்கள் ரஷ்யாவின் தாக்குதலால் தரைமட்டமாகியுள்ளது.

அகதிகள்
பலியானோரின் எண்ணிக்கையும் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. அதே போல் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளில் இருந்து அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.
இதுமட்டுமின்றி அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்ட ரயில் நிலையம் காட்சிகள் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.

உக்ரைன் குற்றச்சாட்டு
உக்ரைனில் ரஷ்யா போர் குற்றத்தில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். ரஷ்ய ராணுவத்தினர் உக்ரைனில் உள்ள பெண்களை வன்புணர்வு செய்வதாகவும், குழந்தைகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதே குற்றச்சாட்டை முன்வைத்து அண்மையில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் பெண் ஒருவர், அரை நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டது பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்தது.

கீவ் மீது தாக்குதல்
ஏப்ரல் கடைசி வாரத்தில் கீவ் நகரில் இருந்து பின்வாங்கிய ரஷ்ய ராணுவம், கிழக்கு உக்ரைனில் மட்டும் தாக்குதலில் ஈடுபட்டு வந்தது. இந்தநிலையில் ஒரு மாதத்திற்கு பின்னர் மீண்டும் கீவ் நகரில் ரஷ்யா தாக்குதலை தொடங்கியுள்ளது. கடந்த ஞாயிறு அன்று பல்வேறு ஏவுகணைகளை கீழ் நோக்கி ஏவியதாக கூறப்படுகிறது. இதில் பல்வேறு பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
Recommended Video

அணுமின் நிலையம் மீது தாக்குதல்?
ரஷ்யா எய்ந்த ஏவுகணை ஒன்று, உக்ரைனின் இரண்டாவது பெரிய அணுமின் நிலையமான பிவ்டென்னவ்க்ரைன்ஸ்கா அணுமின் நிலையத்தை ஒட்டி பறந்துள்ளது. இது மைகோலேவ் பிராந்தியத்திற்கு அருகில் உள்ளது. கீவ் நகரில் இருந்து 350 கிமீ தெற்கே உள்ள இந்த அணுமின் நிலையத்தை ஒட்டி ஏவுகணை சென்றுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள உக்ரைன் அரசின் அணுசக்தி நிறுவனம், ரஷ்ய கப்பல் ஏவுகணை ஒன்று, அணுமின் நிலையத்தில் உயரத்தில் இருந்து மிகவும் தாழ்வாக பறந்ததாக தெரிவித்துள்ளது. அது, கீவ் நகரை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையாக இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications