ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக ஆதாரமற்ற செய்தி வெளிட்டால் 15 ஆண்டு சிறை! ஊடகங்களுக்கு புதின் கெடுபிடி
மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக அந்நாட்டு மக்கள் யாருமே கருத்துகளைத் தெரிவிக்க முடியாத வகையில், பல கடுமையான சட்டங்களை ரஷ்ய அதிபர் புதின் கொண்டு வந்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது கடந்த வியாழக்கிழமை முழு வீச்சிலான போரை ரஷ்யா ஆரம்பித்தது. ஒரு வாரத்தைக் கடந்தும் போர் தொடரும் நிலையில், உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.
ரஷ்யாவின் இந்த போரைத் தடுக்க உலக நாடுகள் அறிவித்த பொருளாதாரத் தடைகள் பெரியளவில் பலன் தருவதாக இல்லை, இதன் காரணமாகவே 10ஆவது நாளாகப் போர் தொடர்கிறது.

மக்கள் போராட்டம்
ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கைக்கு ரஷ்ய மக்களே முழுவதுமாக ஆதரவு தெரிவிக்கவில்லை. ரஷ்ய தலைநகர் மாஸ்கோ தொடங்கிப் பல முக்கிய நகரங்களில் ரஷ்ய மக்கள் போருக்கு எதிராகப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ராணுவ நடவடிக்கைக்கு எதிராகப் போராடும் மக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ள போதிலும், ஆங்காங்கே போராட்டம் தொடர்ந்தே வருகிறது. இந்தச் சூழலில் இதை ஒடுக்கும் வகையில் அதிபர் புதின் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

15 ஆண்டுகள் சிறை
அதாவது ரஷ்ய ராணுவம் குறித்து போலிச் செய்திகளைப் பரப்பினால் சிறைத் தண்டனை விதிக்கும் சட்டத்தில் அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார். இந்தச் சட்டத்தின் படி ரஷ்ய ராணுவம் குறித்து வேண்டுமென்றே தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் அபராதங்கள் விதிக்கப்படும். மேலும், 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்பதால் இந்தச் சட்டம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ரஷ்ய அரசு அறிவிக்கும் தகவல்களை தவிர அனைத்தும் போலியானவை என்று அந்நாட்டு அரசு கூறுவதால், போர் மற்றும் ராணுவம் கருத்து கூறும் யார் மீது வேண்டுமானாலும் ரஷ்ய அரசால் எளிதாக நடவடிக்கை எடுக்க முடியும்.

என்ன சொன்னாலும் சிறை
மேலும், ரஷ்யாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் எனக் கூறும் நபர்கள் மீது மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கும் சட்டத்திலும் புதின் கையெழுத்திட்டார். ஏற்கனவே, ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வரும் சூழலில், அதற்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் ரஷ்யர்களை தடுக்கும் வகையில் அதிபர் புதின் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

எதிர்ப்பாளர்களுக்கு ஏற்கனவே சிறை
ஏற்கனவே, அதிபர் புதின் கடந்த ஆண்டுகளில் ரஷ்ய அரசைக் கடுமையாக விமர்சித்து வந்த நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வந்தது. குறிப்பாக, புதினுக்கு சவாலாக உருவெடுத்த அலெக்ஸி நவால்னி சிறையில் அடைக்கப்பட்டார். இப்படி அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்த நபர்களை ஒடுக்கிய பின்னரே, உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை அதிபர் புதின் தீவிரப்படுத்தினார்.
Recommended Video

ஊடகங்களுக்குக் கட்டுப்பாடு
ஏற்கனவே, ரஷ்யாவில் பல்வேறு ஊடகங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. போர் தொடர்பாக ரஷ்ய அரசு அளிக்கும் செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற பல கட்டுப்பாடுகளை விதித்து வருவதால், ஏற்கனவே இரு செய்தி நிறுவனங்கள், தங்கள் செய்தியாளர்களின் பாதுகாப்பு கருதி உக்ரைன் செய்திகளை நிறுத்துவதாகக் கூறியது. அதேபோல பிபிசி நிறுவனமும் ரஷ்யாவில் அதன் செயல்பாடுகளைப் பாதியாகக் குறைத்துள்ளது.












Click it and Unblock the Notifications