அமெரிக்க-சிரிய போரை தடுத்ததற்காக ரஷ்ய அதிபர் புதின் பெயர் நோபல் பரிசுக்குப் பரிந்துரை
சிரிய உள்நாட்டு போரில் அந்நாட்டின் அதிபர் பஷர் அல்-ஆசாத் அப்பாவி பொது மக்கள் மீது விஷவாயு தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றதாக மனித உரிமை அமைப்புகள் மற்றும் சில அண்டை நாடுகள் குற்றம் சாட்டின.
அதனைத் தொடர்ந்து, மனித உரிமைகளை மீறிய சிரியா அதிபருக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் ராணுவ தாக்குதல் நடத்தப் போவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தார்.
விரைவில் அமெரிக்காவிற்கும், சிரியாவிற்கும் போர் மூளும் என உலக நாடுகள் அஞ்சிய நிலையில், ரஷ்ய அதிபர் விளாமிர் புடின் சம்பந்தப்பட்ட இருநாடுகளுக்குமிடையே சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டார்.
இந்நிலையில், ராணுவ நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றால் தங்களிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை எல்லாம் ஐ.நா. அதிகாரிகளிடம் ஒப்படைத்து அவற்றை அழித்து விடுவதாக சிரியா பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என அமெரிக்கா நிபந்தனை விதித்தது.
சிரியாவின் நட்பு நாடான ரஷ்யா, ‘போரை தவிர்க்கும் வகையில் சிரியா தன்வசம் உள்ள ரசாயன ஆயுதங்களை அழித்து விடுவதுதான் நல்லது' என வற்புறுத்தி சம்மதிக்க வைத்தது. இதன் மூலம் சிரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் மூள இருந்த போர் தவிர்க்கப்பட்டது.
இதன் விளைவாக தனது சமயோஜித புத்தியால், அமெரிக்க-சிரிய போரைத் தவிர்த்ததற்காக புதின் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. ரஷ்ய அரசின் உயரதிகாரிகளை உறுப்பினர்களாக கொண்ட ஆன்மீக ஒருமைப்பாட்டுக்கான சர்வதேச அமைப்பு இதற்கான பரிந்துரையை நோபல் பரிசு தேர்வு கமிட்டிக்கு அனுப்பியுள்ளது.
அதில், 'ராஜதந்திர நடவடிக்கைகளின் மூலம் ஓர் பெரும்போரை தவிர்த்து, சமாதானத்தை ஏற்படுத்திய எங்கள் ஜனாதிபதிக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும்.
ஆளில்லா விமான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு ராணுவ தாக்குதல்களை நடத்திய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு 2009ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியதை விட தற்போது அமைதிக்காக பாடுபட்டு போரையும், பல்லாயிரக் கணக்கான மக்கள் ரத்தம் சிந்துவதையும் தவிர்த்த எங்கள் ஜனாதிபதி புதினுக்கு இவ்விருதை வழங்குவதே மிகவும் பொருத்தமானதாக இருக்கும்' என அந்த பரிந்துரை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.