பெரும் படையை அனுப்பும் இஸ்ரேல்.. சுக்குநூறாக உடையும் காசா! பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அழைப்பு
மாஸ்கோ: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் மிக கடுமையான தாக்குதலை தொடுத்து வருகிறது. மத்திய தரைக்கடல் பகுதியில் இதுபோன்ற சூழல் உருவானதற்கு அமெரிக்காதான் காரணம் என ரஷ்ய அதிபர் புதின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா முன் வருவதாகவும் கூறியுள்ளார்.
அகதிகளாக வந்த யூதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக 90 சதவிகிதத்திற்கும் அதிகமான பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து இஸ்ரேலை உருவாக்கியுள்ளனர். கடந்த 1947ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை இது அரங்கேறியுள்ளது. இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடிய பாலஸ்தீன விடுதலை குழுக்கள் மீது இஸ்ரேல் மேற்கு நாடுகளுடன் கைகோர்த்து தாக்குதலை நடத்தி இருந்தது. எனவே பொறுத்து பொறுத்து பார்த்த இந்த குழுக்கள் ஆயுதங்களை கையில் ஏந்த தொடங்கினர். இது 1980களில் அதாவது இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை தொடங்கி 40 ஆண்டுகள் கழித்து நடந்திருக்கிறது.

ஆனால் இஸ்ரேலும் அதனுடன் சேர்ந்து மேற்கு நாடுகளும் இந்த விடுதலை அமைப்புகளை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தியுள்ளன. இதன் பின்னர் இந்த அமைப்புகள் மீதும் பாலஸ்தீனத்தின் மீதும் நடத்தப்பட்ட தக்குதல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. இந்த தாக்குதலை எதிர்த்து ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் அடிக்கடி எதிர் தாக்குதலை தொடுத்திருந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த 7ம் தேதியன்று எதிர்பாராத வகையில் இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதலை ஹமாஸ் நடத்தியது. ஒரே நேரத்தில் 5000 ஏவுகணைகள் வீசப்பட்டதால் இஸ்ரேலின் பாதுகாப்பு அம்சமான 'அயர்ன் டோம்' ஓவர் லோடாகி சில ஏவுகணைகளை தவறவிட்டிருக்கிறது. இது இஸ்ரேலில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பதில் தாக்குதல் நடத்துவதாக கூறி இஸ்ரேல், காசா மக்கள் மீது மிக கடுமையான தாக்குதலை தொடுத்து வருகிறது. காசா எனும் பகுதியே இருக்கக்கூடாது என்று வெளிப்படையாகவே இஸ்ரேல் அதிகாரிகள் முழங்கி வருகின்றனர். இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 447 குழந்தைகள், 250 பெண்கள் என மொத்தம் 1537 பாஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 6,268 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதேபோல ஹமாஸ் படையினர் வசம் இருக்கும் இஸ்ரேலிய பிணை கைதிகள் விடுவிக்கப்படும் வரை காசாவுக்கு செல்லும் குடிநீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் என அனைத்தும் துண்டிக்கப்படும் என இஸ்ரேல் அமைச்சர் கூறியிருந்தார். அதேபோல தற்போது அனைத்தும் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், 24 மணி நேரத்திற்குள் காசாவில் இருக்கும் அனைவரும் வெறியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது. "குறுகிய நேரத்தில் 11 லட்சம் மக்கள் வெளியேற கூறியிருப்பது மிகப்பெரிய அழிவுகளையே கொண்டு வந்து சேர்க்கும். உடனடியாக இந்த அறிவிப்பை திரும்ப பெறுங்கள்" என ஐநா மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது. ஏற்கெனவே இதுவரை காசாவின் 4.23 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர். மேலும் குடிநீர், உணவு இல்லாமல் காசாவில் 50,000 கர்ப்பிணிகள் சிக்கியுள்ளனர் என்றும் ஐநா கவலை தெரிவித்துள்ளது. தற்போது இஸ்ரேலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய ரூ.2,400 கோடிக்கும் மேல் செலவாகும் என ஐநா கணித்திருக்கிறது.
நிலைமை இப்படியாக இருக்க இஸ்ரேலின் படையெடுப்பு ஏற்றுக்கொள்ளாத அளவில் பொதுமக்கள் உயிரிழப்பை கொண்டு வரும் என்று ரஷ்யா கூறியுள்ளது. மேலும், மத்திய தரைக்கடல் பகுதியில் இதுபோன்ற சூழல் உருவானதற்கு அமெரிக்காதான் காரணம் என ரஷ்ய அதிபர் புதின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா முன் வருவதாகவும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications