ரஷ்யாவின் 'நிழல் கப்பல்' ரகசியம்.. அமெரிக்காவிற்கு விபூதி அடித்து 13 லட்சம் கோடி சம்பாதிப்பது எப்படி
மாஸ்கோ: ரஷ்யாவின் பொருளாதாரத்தை எப்படியாவது முடக்க வேண்டும் என்று அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றன. அதற்காகவே ரஷ்யாவிற்கு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் ரஷ்யாவிற்கு வருமானம் வரும் வழிகளையும் அமெரிக்கா அடைத்து வருகிறது. ஆனால் அப்படி முடக்க நினைக்கும் அமெரிக்காவிற்கு சவால் விடும் வகையில், ரஷ்ய அதிபர் புதினின் 'நிழல் கப்பல் படை' கடலில் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவிற்கு விபூதி அடித்து சம்பாதித்து வருகிறது.
ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் ஒருபுறம் இறுக்கப்பட்டு வருகிறது. மறுபுறம் ரஷ்யாவின் எண்ணெய் விற்பனை மட்டும் குறையாமல் இருப்பதற்குப் பின்னால் ஒரு பிரம்மாண்டமான 'நிழல் கப்பல் படை' இயங்கி வருகிறது. உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ரஷ்யா நடத்தும் இந்த ரகசிய வர்த்தகம் நிச்சயம் பெரிய விஷயம் தான்.

என்ன இந்த 'நிழல் கப்பல்கள்'?
சர்வதேச விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு, பழைய மற்றும் பாதுகாப்புத் தரம் குறைந்த கப்பல்களை ரஷ்யா ரகசியமாக விலைக்கு வாங்கி இந்தப் பணியில் ஈடுபடுத்துகிறது. இந்தக் கப்பல்கள் எந்தவொரு மேற்கத்தியக் காப்பீட்டு நிறுவனத்திடமும் பதிவு செய்யப்படுவது கிடையாது.
புள்ளி விவரங்கள் (2025-26 நிலவரம்)
கப்பல்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை இதுபோன்று தற்போது சுமார் 600-லிருந்து 800 கப்பல்கள் ரஷ்யாவின் இந்த நிழல் படையில் இருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த ரகசியக் கப்பல்கள் மூலம் மாதம் ஒன்றுக்கு சுமார் $11 பில்லியன் முதல் $15 பில்லியன் வரையிலான எண்ணெய் வர்த்தகம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது 11 லட்சம் முதல் 13 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ரஷ்யாவின் வர்த்தகம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் கப்பல்கள் பெரும்பாலும் 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. இவை எந்த நேரத்திலும் விபத்துக்குள்ளாகும் அபாயம் கொண்டவை என்று கூறப்படுகிறது.
விற்பனை அணுகுமுறை: எப்படித் தப்பிக்கிறார்கள்?
ரஷ்யா கையாண்டு வரும் இந்த ரகசிய யுத்திகள் சர்வதேசக் கடற்படையையே தலைசுற்ற வைக்கிறது. சர்வதேசக் கண்காணிப்புக் கருவிகளில் சிக்காமல் இருக்க, நடுக்கடலில் இந்தக் கப்பல்கள் தங்கள் ஜிபிஎஸ் கருவிகளை அணைத்துவிட்டுப் பயணிக்கின்றன. ஒரு ரஷ்யக் கப்பலிலிருந்து மற்றொரு நாட்டுப் பெயரில் இருக்கும் கப்பலுக்கு நடுக்கடலில் வைத்து எண்ணெயை மாற்றுகிறார்கள். இதன் மூலம் அந்த எண்ணெய் எங்கிருந்து வந்தது என்ற தடயத்தையே அழித்துவிடுகிறார்கள்.
பெயர் மாற்றம்:
ஒரே கப்பலுக்குச் சில வாரங்களிலேயே இரண்டு மூன்று பெயர்களை மாற்றி, போலி ஆவணங்களைத் தயாரித்துத் துறைமுகங்களில் நுழைந்து விடுகிறார்கள்.
யாருக்கு லாபம்?
இந்த நிழல் கப்பல்கள் மூலம் எண்ணெய் வாங்குவதில் சீனா மற்றும் சில தென்கிழக்கு ஆசிய நாடுகள் முன்னணியில் உள்ளன. குறைந்த விலைக்கு எண்ணெய் கிடைப்பதால், சர்வதேசத் தடைகளை மீறி இந்தத் திருட்டுத்தனமான வர்த்தகம் தழைத்தோங்கி நடக்கிறது.
சவால்கள் என்ன
பழைய கப்பல்கள் என்பதால் கடலில் எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. இது நடந்தால், எந்தக் காப்பீட்டு நிறுவனமும் பொறுப்பேற்காது என்பதால், இது ஒரு 'சுற்றுச்சூழல் நேரடி வெடிகுண்டு' என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். ஆனாலும் அமெரிக்காவிற்கு விபூதி அடித்துவிட்டு சம்பாதிக்க ரஷ்யா இந்த வழியைத்தான் தற்போது பின்பற்றி வருகிறது.
அமெரிக்காவிற்கு தலைவலி
ரஷ்யாவிடம் நேரடியாக ஆயில் விற்கும் ஒரே நாடு இப்போது சீனா மட்டுமே. மற்ற நாடுகள் எல்லாம் கள்ளத்தனமாகவே வாங்குகின்றன. சில ஐரோப்பிய நாடுகளுமே கள்ளத்தனமாக ரஷ்யாவிடம் ஆயில் வாங்கி கொண்டு தான் இருக்கின்றன. இது உக்ரைன் போரை நிறுத்த நினைக்கும் அமெரிக்கஅதிபர் டிரம்புக்கு பெரிய தலைவலியாக உள்ளது.












Click it and Unblock the Notifications