கேம் சேஞ்சராக மாறிய சுகோய்! அமெரிக்காவுக்கு மட்டுமல்ல.. பாகிஸ்தான்+சீனாவுக்கும் சிக்கல்தான்
மாஸ்கோ: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் சுகோய் விமானங்களை இயக்கி ரஷ்யா சாதித்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சுகோய் விமானங்கள் இயக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
இந்தியாவிடம் சுமார் 270க்கும் அதிகமான சுகோய் ரக விமானங்கள் இருக்கின்றன. இந்த விமானங்கள் இந்திய விமானப்படைக்கு முதுகெலும்பாக இருக்கின்றன.

சுகோய் வகையில் Su-57M (சுகோய் என்பதைதான் Su என குறிப்பிடுகிறோம்) எனும் போர் விமானத்தை முதல் முறையாக ரஷ்யா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் பறக்க வைத்திருக்கிறது. Su-57M என்பது ரஷ்யாவின் Su-57 போர் விமானத்தின் மேம்பட்ட வகையாகும். இந்த விமானம் முழுமையாக ஏஐ தொழில்நுட்பத்தால் பறக்க வைக்கப்பட்டாலும், விமானத்தின் பாதுகாப்புக்காக உள்ளே செர்ஜி போக்டன் என்கிற டெஸ்ட் பைலட் உட்கார வைக்கப்பட்டிருந்திருக்கிறார். ஆனால் விமானம் முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தால் பறக்க வைக்கப்பட்டிருக்கிறது.
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் போர் களத்தில் உயிரிழப்புகளை தவிர்க்க முடியும். ரஷ்யாவின் இந்த சாதனையை அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகள் உன்னிப்பாக கவனித்துள்ளன.
இந்த சாதனை அமெரிக்காவை விட சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும்தான் கிலியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இந்த வகை விமானங்கள் இந்தியாவிடம் அதிகம் இருக்கின்றன. சுகோய் என்பது ஒரு ரகம். அதில் எந்த அப்டேட் வந்தாலும், அந்த ரக விமானங்களை அதற்கேற்றார் போல மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இந்தியாவிடம் சுகோய்-30MKI எனும் விமானம் 270 இருக்கிறது. இது முழுவதும் ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டால் எப்படி இருக்கும்?
இந்தியாவுக்கு ரஷ்யா நம்பகமான ஆயுத பார்ட்னர். 1996 ஆம் ஆண்டு ரஷ்யாவிடமிருந்து நாம் ஜெட் விமானங்களை வாங்க தொடங்கினோம். காலப்போக்கில் முழு விமானமும் ரஷ்யாவிலிருந்து வருவதற்கு பதில் அதன் தயாரிப்பு பேட்டனை நாம் வாங்கி, உள்ளூரில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் மூலம் உதிரி பாகங்கள் உருவாக்கப்பட்டு அது இங்கேயே அசெம்பிள் செய்யப்பட்டன. இப்படி செய்வதன் மூலம் இந்தியாவின் கால சூழலுக்கு ஏற்ப, நம்முடைய நாட்டுக்கென தனித்தன்மையுடன் இந்த விமானங்கள் தயாரிக்கப்பட்டன.
இதில் இப்போது செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தையும் சேர்த்தால், அது மிக வலிமைமிக்கதாக உருவாகும். இப்படியான விமானங்கள் பாகிஸ்தானுக்கு நேரடி அச்சுறுத்தலாகும். இப்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மோதல் போக்கு அதிகரித்திருக்கும் சூழலில் இப்படியான அப்டேட் வந்திருப்பது நிச்சயம் பாகிஸ்தானுக்கு நல்ல செய்தி இல்லை. அதே நேரம், சீனாவுக்கும் இது சவாலான விஷயம்தான். ஏனெனில், சுகோய்-57M விமானம் அமெரிக்காவின் தலைசிறந்த போர் விமானங்களான F-22 மற்றும் F-35 விமானங்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் இப்போதைக்கு சுகோய்-57M விமானம் இல்லை. ஆனால், இதை கூட்டு சேர்ந்து தயாரிக்கும் பணியில் ரஷ்யாவுடன் இந்தியா ஒரு காலத்தில் சேர்ந்திருந்தது. 2018ல் இந்த கூட்டு முயற்சியிலிருந்து இந்தியா வெளியேறிவிட்டது. இருப்பினும், இந்த ரக விமானங்களை மீண்டும் இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ரெடியாக இருப்பதாக ரஷ்யா அறிவித்திருக்கிறது. அப்படியெனில், இந்த விமானம் நமது கைகளுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று அர்த்தம். அப்படி நடந்தால் சீனா உஷாராகும்.












Click it and Unblock the Notifications