தீவிரவாதிகளுக்கு பாக். அடைக்கலம் கொடுப்பதற்கு ஒபாமா கண்டனம்!
வாஷிங்டன்: தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமெரிக்கா அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நாளை மறுநாள் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் அமெரிக்கா அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இதற்காக அவர் மனைவி மிச்செல்லுடன் ஏர்போர்ஸ்-1 விமானம் மூலம் நாளை காலை டெல்லி வந்து சேருகிறார். இதையொட்டி ஒபாமா பிரபல ஆங்கில பத்திரிகைக்கு சிறப்பு பேட்டி அளித்து உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

ஏற்க முடியாது..
தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாகிஸ்தானுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றி வருகிறது. இருந்தபோதிலும், தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக பாகிஸ்தான் திகழ அனுமதிக்க முடியாது என்பதை நான் அந்த நாட்டுக்கு தெளிவுபடுத்தி விட்டேன். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது.

தீவிரவாதிகளை தண்டிக்க வேண்டும்..
அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் சிலரும் பலி ஆனார்கள். பின்னர் மும்பையில் 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்கள் சிலரும் உயிர் இழந்தனர். மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை குற்றவாளி கூண்டில் ஏற்றி, பாகிஸ்தான் தண்டிக்க வேண்டும்.

மும்பையில்..
எனது கடந்த இந்திய பயணத்தின் போது நான் முதலில் மும்பை வந்தேன். அங்கு தாஜ் ஹோட்டலில் உள்ள நினைவிடத்துக்கு சென்று தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன். தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களையும் சந்தித்து பேசினேன். அப்போது, நமது நாடுகளின் பாதுகாப்புக்காக நாம் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று இந்திய மக்களிடம் தெரிவித்தேன்.

இணைந்து செயல்படலாம்..
இந்தியாவும், அமெரிக்காவும் சர்வதேச அளவில் முக்கிய பங்குதாரர்களாக விளங்குகின்றன. சில விஷயங்களில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவிய போதிலும், பரஸ்பர நம்பிக்கை, மரியாதையின் அடிப்படையில் நாம் இணைந்து செயல்பட முடியும்.

தடைகளை அகற்றலாம்..
இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் வர்த்தகம், முதலீடு, உயர் தொழில்நுட்பம் போன்ற துறைகளின் மேம்பாட்டுக்கு இருந்து வரும் தடைகளை அகற்ற முடியும்.

போர் ஓயாது..
தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போர் ஓயாது. இந்தியர்களும், அமெரிக்கர்களும் ஒன்றுபட்டு நடத்துகிற போர் இது. அணுஆயுத பரவலை தடுக்க இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

ஆப்கானிஸ்தான்..
ஆப்கானிஸ்தானை மறுசீரமைக்க இந்தியா உதவி செய்வது பாராட்டுக்குரியது. அந்த நாட்டு மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்காக இந்தியா பல ஆண்டுகளாக உதவி வருகிறது.

பாக். பள்ளி தாக்குதல்
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக் கூடத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் பலி ஆனார்கள். இந்த தாக்குதல், தீவிரவாதிகள் நம் அனைவரையும் அச்சுறுத்துவதை நினைவூட்டும் வேதனையான நிகழ்வு ஆகும்.
இவ்வாறு ஒபாமா கூறினார்.












Click it and Unblock the Notifications